கான்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிர்ச்சிகரமான முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறார். டாஸ் வென்ற பின் அவர் பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தார். கடந்த 9 ஆண்டுகளில் இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் டாஸ் வென்ற பின் இந்திய அணி எப்போதும் பந்துவீச்சை தேர்வு செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மண்ணில் எப்போதுமே நான்காவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது கடினம் என்பதால் இந்திய அணி மிகச் சில சந்தர்ப்பங்களில் மட்டுமே டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளாக எப்போதுமே இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததே இல்லை.

ஆனால், இந்த டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்ததற்கு வானிலை முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. கான்பூரில் போட்டியின் முதல் மூன்று நாட்களின் போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதனால், போட்டி முழுமையாக நடைபெறுமா? நான்கு இன்னிங்க்ஸ்களும் ஆடப்படுமா? என்ற சந்தேகம் உள்ளது.
அதன் காரணமாகவே இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து இருப்பதாக சுட்டி காட்டுகிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். முக்கியமாக இந்த போட்டியை டிரா செய்ய விடாமல் வங்கதேச அணியை தடுக்கவே ரோஹித் சர்மா இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்கிறார்கள். ஒரு போட்டியை டிரா செய்வது என்பது நான்காவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் அணியின் கையிலேயே உள்ளது.
நான்காவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் அணி டிரா செய்ய வேண்டும் என முடிவு எடுத்தால், அனைத்து பந்துகளையும் வீணடித்து நிதானமாக பேட்டிங் செய்யும். அதை மீறி விக்கெட்களை வீழ்த்துவது என்பது பந்து வீசும் அணிக்கு சவாலான ஒன்றாக இருக்கும். தற்போது இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்திருப்பதால், இந்திய அணியே நான்காவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டி டிரா ஆகாமல் இருக்க வேண்டும் என்ற இந்திய அணியின் நோக்கம் சரியானதாக இருந்தாலும், இது ஆபத்தான முடிவாகவும் அமையலாம். மழை பெய்த பின் அதே பிட்ச்சில் போட்டி நடக்கும் போது பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும். அதிலும் நான்காவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும். மேலும், இந்த போட்டிக்கு அமைக்கப்பட்டுள்ள கருப்பு நிற மண் கொண்ட பிட்ச்சில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது எளிதாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததன் மூலம், முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடும் வாய்ப்பை விட்டுக் கொடுத்ததோடு, நான்காவது இன்னிங்ஸில் கடினமான சூழ்நிலையிலும் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இது இந்திய அணிக்கு சாதகமா? அல்லது பாதகமா? என்பது போட்டியின் முடிவிலேயே தெரியவரும்.