செம பார்மில் இருக்கும் மூத்த வீரரை கழட்டி விட்ட இந்திய அணி.. டி20 அணியில் நடக்கும் கேலிக்கூத்து!
மும்பை : இந்தியா - வங்கதேசம் இடையே ஆன டி20 தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டது. அதில் ரவீந்திர ஜடேஜா பெயர் இடம் பெறவில்லை.
சமீப காலமாக பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் அட்டகாசம் செய்து வரும் ஜடேஜாவுக்கு டி20 அணியில் இடம் அளிக்கப்படவில்லை என்பது பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
மற்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க, நல்ல பார்மில் இருக்கும் ஜடேஜாவை நீக்கி இருப்பது விவாதத்துக்கு உரியதாக மாறி உள்ளது.

பேட்ஸ்மேன் ஜடேஜா
ஜடேஜா முதல் தர போட்டிகளில் முச்சதம் அடித்து, ரன் குவித்து அசத்திய பின்னரே இந்திய அணியில் நுழைந்தார். நல்ல பேட்டிங் ஆல் - ரவுண்டர் என்ற பெயரிலேயே அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், முழு நேர பந்துவீச்சாளராகவே மாறினார்.

நல்ல பார்ம்
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜடேஜாவின் பேட்டிங் பெரிய அளவில் சர்வதேச அரங்கில் எடுபடவில்லை. எனினும், கடந்த ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முதல், வெ.இண்டீஸ் தொடர், ஐபிஎல், உலகக்கோப்பைகளில் ஜடேஜா நல்ல பேட்டிங் செயல்பாட்டை பதிவு செய்தார்.

டெஸ்ட் தொடரில் அதிரடி
சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ஜடேஜா அணியின் தேவைக்கு ஏற்ப நிதான ஆட்டம், அதிரடி ஆட்டம் என ஆடி கலக்கினார். இது ஜடேஜாவின் புதிய ஆரம்பம் என விமர்சகர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

வங்கதேச தொடர்
இந்த நிலையில், வங்கதேச அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் ஆட இந்தியா வருகிறது. வங்கதேச அணியில் அனுபவ வீரர்கள் அதிகம் உள்ளனர். உலக அரங்கில் அந்த அணி வலுவான அணியாகவே பார்க்கப்படுகிறது.

தேர்வான அணி
அதற்கான அணித் தேர்வில் இந்தியா முழு பலம் கொண்ட அணியையே தேர்வு செய்யும் என கருதப்பட்டது. டி20 அணியில் ஏற்கனவே பல இளம் வீரர்கள் இருப்பதால் பெரிய மாற்றங்கள் செய்யப்படாது என கருதப்பட்டது.

ஜடேஜா இல்லை
ஆனால், அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டது. விராட் கோலிக்கு பதில் சஞ்சு சாம்சன், ஹர்திக் பண்டியாவுக்கு பதில் சிவம் துபே, நவ்தீப் சைனிக்கு பதில் ஷர்துல் தாக்குர், ஜடேஜாவுக்கு பதில் சாஹல் தேர்வு செய்யப்பட்டனர்.

காரணம் என்ன?
கோலி ஓய்வு எடுக்கச் செல்கிறார். பண்டியா காயத்தில் இருக்கிறார். இளம் வீரர் ஷர்துல் தாக்குருக்கு வாய்ப்பளிக்க மற்றொரு வீரர் நவ்தீப் சைனி நீக்கப்பட்டார். ஆனால், சாஹலை அணியில் சேர்க்க மற்றவர்களை விடுத்து ஜடேஜாவை நீக்கியது தான் கேள்வி எழுப்பி உள்ளது.

ராகுல் சாஹர், வாஷிங்க்டன் சுந்தர்
கடந்த தென்னாப்பிரிக்க டி20 தொடரில் அணியில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றனர். க்ருனால் பண்டியா, ஜடேஜா ராகுல் சாஹர், வாஷிங்க்டன் சுந்தர் ஆகியோரில் சுந்தர் அணியில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். அவர் தவிர இருக்கும் மூவரில் சாஹர், க்ருனால்-ஐ விட்டு விட்டு ஜடேஜா நீக்கப்பட்டுள்ளார்.

க்ருனால் பண்டியா
தேர்வுக் குழு தலைவர் ஜடேஜா நீக்கம் பற்றி விளக்கம் அளித்த போது க்ருனால் பண்டியா, ஜடேஜா இருவரும் தனித் தனியாக எப்படி ஆடுகிறார்கள் என பார்க்கப் போவதாக கூறினார். அதாவது இருவரில் ஒருவருக்கு தான் அணியில் வாய்ப்பு என்பது போல கூறினார்.

சரியான முடிவா?
இனி அடுத்த டி20 தொடரில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பதும் தெரியவில்லை. நல்ல பார்மில் இருக்கும் ஒரு வீரரை பரிசோதனை முயற்சி என்ற பெயரில் நீக்கி, இந்திய டி20 அணியில் கேலிக்கூத்து நடந்துள்ளது. இது சரியான முடிவாக அமையுமா? என்பது தொடரின் முடிவில் தெரியும்.


Click it and Unblock the Notifications