பெங்களூர்: துலீப் டிராபி தொடரில் இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பி அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்திய அணிக்காக ஆடிய வீரர்கள் ஏராளமானோர் இந்தியா ஏ அணியில் இருந்த போது, இந்தியா பி அணியின் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை கைப்பற்றியுள்ளனர்.
துலீப் டிராபி தொடரில் இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா பி அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா அணி முஷீர் கானின் அபார ஆட்டத்தால் 321 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய முஷீர் கான் 373 பந்துகளில் 5 சிக்ஸ், 16 பவுண்டரி உட்பட 181 ரன்களை விளாசினார். இதன்பின் களமிறங்கிய இந்தியா ஏ அணி 231 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

இதனால் 2வது இன்னிங்ஸில் 90 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா பி அணி ஆட்டத்தை தொடங்கியது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா பி அணி ரிஷப் பண்ட்-ன் அதிரடி ஆட்டத்தால் 184 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனால் இந்தியா ஏ அணி வெற்றிபெற 274 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்பின் இந்தியா ஏ அணி தொடக்கத்திலேயே அதிரடியாக ரன்களை சேர்க்க தொடங்கியது.
இதனால் ஆட்டம் நிச்சயம் டிராவில் முடியாது என்று பார்க்கப்பட்டது. 2வது ஓவரிலேயே மயங்க் அகர்வால் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், சுப்மன் கில் - ரியான் பராக் இருவரும் அதிரடியாக ரன்களை குவித்தனர். அதிலும் ரியான் பராக் யாஷ் தயாள் மற்றும் முகேஷ் குமாரின் பவுலிங்கில் அதிரடியாக 3 சிக்சர்களை பறக்கவிட்டார். இதனால் 7 ஓவர்களிலேயே அணியின் ஸ்கோர் 51 ஆக உயர்ந்தது.
ஆனால் யாஷ் தயாள் வீசிய பந்தில் ரியான் பராக் 18 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து சுப்மன் கில்லும் 21 ரன்களில் வெளியேறினார். பின்னர் கேஎல் ராகுல் ஒரு முனையில் நின்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, தொடர்ந்து வந்த துருவ் ஜுரெல் மற்றும் தனுஷ் கோட்டியான் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் 76 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா அணி தடுமாறியது.
பின்னர் சிவம் துபே, குல்தீப் யாதவ் உள்ளிட்டோருடன் சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்த கேஎல் ராகுல், அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால் அரைசதத்தை எட்டிய கேஎல் ராகுல், விக்கெட்டை பறிகொடுக்க கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தார். ஆனால் முகேஷ் குமார் வேகத்தில் 57 ரன்கள் எடுத்து கேஎல் ராகுல் ஆட்டமிழக்க, கிட்டத்தட்ட இந்தியா ஏ அணியின் தோல்வி உறுதியானது.
கடைசி நேரத்தில் களமிறங்கிய ஆகாஷ் தீப் அதிரடியாக விளையாடி 4 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 43 ரன்களை விளாசினார். ஆனால் ஷார்ட் லெக்கில் இருந்த முஷீர் கானிடம் பந்தை அடித்துவிட்டு ஒரு ரன் எடுக்க முயற்சிக்க, எளிதாக ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் இந்தியா ஏ அணி 198 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்தியா பி அணி தரப்பில் யாஷ் தயாள் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.