ஹைதராபாத்: வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக 40 பந்துகளில் சதம் அடித்தார். சூர்யகுமார் யாதவ் மறுபுறம் அதிரடி ஆட்டம் ஆடியதால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இந்த ஆட்டத்தால் இந்திய அணி பல்வேறு டி20 சாதனைகளை உடைத்து எறிந்து இருக்கிறது.
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா 4 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.

அதன் பின் மற்றொரு துவக்க வீரர் சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினார்கள். சஞ்சு சாம்சன் கடந்த இரண்டு போட்டிகளில் சரியாக ரன் குவிக்காததால் அவருக்கு இது கடைசி வாய்ப்பாக பார்க்கப்பட்டது. முதலில் வரிசையாக ஃபோர் அடித்தார்.
ஒரே ஓவரின் நான்கு ஃபோர் அடித்து மிரட்டினார். இதை அடுத்து இந்திய அணி பவர் பிளே ஓவர்களான முதல் ஆறு ஓவர்கள் முடிவிலேயே 82 ரன்கள் சேர்த்தது. இதுவே சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் அதிகபட்ச பவர் பிளே ஸ்கோர் ஆகும். இந்த சாதனை முடிந்த பின்னர் சஞ்சு சாம்சன் வரிசையாக சிக்ஸ் அடிக்கத் தொடங்கினார்.
சூர்யகுமார் யாதவும் அதிரடி ஆட்டம் ஆடினார். 7.1 ஓவரிலேயே இந்திய அணி 100 ரன்களை கடந்தது. சர்வதேச டி20 போட்டிகளில் இதுவே இந்தியாவின் அதிவேக 100 ரன்கள் ஆகும். இந்த சாதனைகளை அடுத்து சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தை நிறைவு செய்தார். மேலும், இந்திய அணி 10 ஓவர்களில் 152 ரன்களை எட்டியது. சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக எடுக்கப்பட்ட முதல் பத்து ஓவர் ஸ்கோரில் இது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.