ஹைதராபாத்: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி அதிக பவுண்டரி அடித்து மாபெரும் உலக சாதனையை செய்துள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி ஹைதராபாத் உப்பல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால் இந்தியா 200 ரன்களை எட்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அதை தாண்டி இந்திய அணி 297 ரன்கள் குவித்தது. 3 ரன்களில் 300 ரன்கள் என்ற மைல்கல் ஸ்கோரை தவறவிட்டு இருந்தது இந்திய அணி. மேலும், 22 சிக்ஸ் மற்றும் 25 ஃபோர் அடித்து இருந்தது இந்திய அணி. இதன் மூலம் மொத்தம் 47 பவுண்டரிகளை அடித்து இந்திய அணி மாபெரும் உலக சாதனை செய்தது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச பவுண்டரி என்ற சாதனையை இந்த இன்னிங்ஸ் படைத்தது. இதற்கு முன் செக் ரிபப்ளிக் மற்றும் டர்க்கி அணிகளுக்கு இடையேயான போட்டியில் 43 பவுண்டரிகள் அடிக்கப்பட்டது உலக சாதனையாக இருந்தது.
டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளுக்கிடையேயான போட்டியில் 42 பவுண்டரிகள் அடிக்கப்பட்டது சாதனையாக இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மோதிய 2023 சென்சுரியன் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும், இலங்கை அணிக்கு எதிராக 2017இல் இந்திய அணியும் அந்த சாதனையை செய்து இருந்தன. அந்த இரண்டு சாதனைகளையும் 47 பவுண்டரிகளுடன் முறியடித்து இருக்கிறது இந்திய அணி.
மேலும், ஒரே டி20 இன்னிங்ஸில் அதிக சிக்ஸ் அடித்த அணிகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. டி20 இன்னிங்க்ஸில் அதிக சிக்ஸ் அடித்த அணிகள் பட்டியலில் மங்கோலியா அணிக்கு எதிராக நேபாள அணி 26 சிக்ஸ் அடித்து முதல் இடத்தில் உள்ளது. சீனாவுக்கு எதிராக ஜப்பான் 23 சிக்ஸ் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் 22 சிக்ஸ் அடித்து மூன்றாவது இடத்தில் உள்ளன.
தற்போது இந்தியாவும் 22 சிக்ஸ் அடித்து மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது. மேலும், இந்த போட்டியில் வங்கதேச அணி 23 பவுண்டரிகளை அடித்தது. இதன் மூலம், இந்த போட்டியில் மொத்தமாக 70 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. சர்வதேச டி20 போட்டிகளில் ஒரே போட்டியில் அடிக்கப்பட்ட அதிக பவுண்டரிகள் எண்ணிகையில் இந்தப் போட்டி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
முன்னதாக தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய செஞ்சுரியன் டி20 போட்டியில் 81 பவுண்டரிகள் அடிக்கப்பட்டு உள்ளது மிகப்பெரும் சாதனையாக உள்ளது. அடுத்து செர்பியா அணிக்கு எதிராக பல்கேரியா 71 பவுண்டரிகள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் 70 பவுண்டரிகள் அடித்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன.