ஹைதராபாத்: உலகின் சிறந்த கிரிக்கெட் அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவால் நினைத்துக் கூட பார்க்க முடியாத பிரம்மாண்ட டி20 சாதனையை செய்து இருக்கிறது இந்திய அணி. வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 297 ரன்கள் எடுத்தது. 300 ரன்கள் என்ற மைலகல்லை மூன்று ரன்களில் இந்திய அணி தவற விட்டு இருந்தாலும் தனது 37 வது 200க்கும் அதிகமான டி20 ஸ்கோரை இந்திய அணி பதிவு செய்து இருந்தது.
இதன் மூலம் உலகிலேயே ஆடவர் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 200க்கும் அதிகமான ரன்கள் குவித்த அணி என்ற இமாலய சாதனையை இந்திய அணி செய்துள்ளது. இது சர்வதேச கிரிக்கெட் ஆடும் அணிகள் மட்டுமின்றி உள்ளூர் டி20 கிரிக்கெட், ஐபிஎல் போன்ற டி20 லீக் அணிகள் என அனைத்து அணிகள் எடுத்த 200+ ஸ்கோர்களை சேர்த்து பார்க்கும் போதும் இந்திய அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் இங்கிலாந்து கவுன்டி அணியான சோமர்செட் 36 முறை 200க்கும் அதிகமான ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் சிஎஸ்கே 35 முறை 200க்கும் அதிகமான ஸ்கோர்களுடன் உள்ளது. நான்காவது இடத்தில் ஆர்சிபி அணி (33 முறை), ஐந்தாவது இடத்தில் மற்றொரு இங்கிலாந்து கவுன்டி அணியான யார்க்ஷயர் (31 முறை) உள்ளன.
சர்வதேச அணிகளில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. ஆஸ்திரேலியா 23 முறை மட்டுமே 200க்கும் அதிகமான டி20 ஸ்கோரை எடுத்துள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியால் இந்தியாவின் 37 முறை 200க்கும் அதிகமான ஸ்கோரை எட்டிய சாதனையை முறியடிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கும்.
இந்திய அணி தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருப்பதால் அடுத்து ஆடும் டி20 போட்டிகளில் மேலும் 200க்கும் அதிகமான ஸ்கோர்களை எடுக்கும் என்பதால் ஆஸ்திரேலியாவால் அந்த சாதனையை துரத்திப் பிடிப்பது இயலாத ஒன்றாகவே இருக்கும். அதன் மூலம் டி20 கிரிக்கெட்டின் சிறந்த அணியாக இந்திய அணி உருவெடுத்து இருக்கிறது.
இந்த சாதனை மட்டுமின்றி ஒரே ஆண்டில் அதிக முறை 200க்கும் அதிகமான ஸ்கோர்கள் எடுத்த அணியாகவும் இந்தியா உள்ளது. 2023ல் இந்திய அணி ஏழு முறை 200க்கும் அதிகமான ஸ்கோர்களை எடுத்து இருந்தது. தற்போது 2024 ஆம் ஆண்டு இதுவரை ஆறு முறை அதை செய்து உள்ளது. அடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நான்கு டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளதால் இந்த சாதனையை இரண்டாவது முறையாக இந்திய அணி முறியடிக்க வாய்ப்பு உள்ளது.