கான்பூர்: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது முதல் மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. அதனால் இரண்டாவது போட்டி டிரா ஆகவும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என கிரிக்கெட் விமர்சகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
தற்போதைய நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது. இந்திய அணியின் வெற்றி சதவீதம் 71.67 ஆக உள்ளது. இந்திய அணி இன்னும் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன் முடிவில் இந்திய அணி முதல் இரண்டு இடங்களில் இடம்பெற்று இருந்தால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அதற்குதான் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.

வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டி மழையின் காரணமாக டிராவில் முடிவடைந்தால் இந்திய அணி அதன் பின் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ஒரு இடத்தை பெற முடியும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வாய்ப்புள்ள அணிகள் எவை என்று பார்த்தால் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா மட்டுமே.
இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன. அந்தத் தொடரில் இந்திய அணியால் அதிக வெற்றிகளை பெற முடியுமா? என்ற சந்தேகம் உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி நான்கு டெஸ்ட் தொடர்களை இந்தியா வென்று இருந்தாலும் அனைத்திலும் இந்திய அணி அதிகபட்சமாக இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
அடுத்து நடக்க உள்ள தொடரிலும் இந்திய அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெறும் என எடுத்துக் கொண்டால், அடுத்து நடைபெற உள்ள வங்கதேச அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியிலும், நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய மண்ணில் நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி முழுமையாக வெற்றி பெற வேண்டும்.
அப்போதுதான் இந்தியா அணி அதிகபட்சமாக 69.29 என்ற வெற்றி சதவீதத்தைப் பெறும். மறுபுறம் தென்னாப்பிரிக்கா அணி வங்கதேசம், இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. அந்த மூன்று தொடர்களிலும் தென்னாப்பிரிக்கா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் தென்னாப்பிரிக்கா 69.4 என்ற வெற்றி சதவீதத்தை பெறும். இந்தியாவை விட சில தசம புள்ளிகள் கூடுதலாக பெறும்.
அந்த வகையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுககு இடையே கடும் போட்டி உள்ளது. இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டி டிராவில் முடிவடைந்தால் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் மூன்று அல்லது நான்கு போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.