ஹாங்சோ : ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா - வங்கதேசம் இடையே ஆன அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நான்கு ஸ்பின்னர்களை களமிறக்கி அதிரடியாக வெற்றி பெற்றது.
ருதுராஜ் கெயிக்வாட் தலைமையில் ஆன இந்திய அணி சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது.

அங்கே வங்கதேசத்திற்கு எதிரான முக்கியமான அரை இறுதிப் போட்டியில் பந்துவீச்சில் ஒரே ஒரு வேகப் பந்துவீச்சாளரை மட்டுமே இந்திய அணி தேர்வு செய்தது. மற்ற நான்கு பேருமே ஸ்பின்னர்கள்தான். இதற்கு முந்தைய காலிறுதிப் போட்டியில் இந்தியா பெற்ற அனுபவம் தான் காரணம்.
முன்னதாக இந்தியா காலிறுதியில் நேபாள அணியை சந்தித்தது. அந்த அணியை வீழ்த்தவே இந்தியா போராட வேண்டியதாக இருந்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஜெய்ஸ்வால் அடித்த சதம் காரணமாக 202 ரன்களை எடுத்தது. அடுத்து அதை சேஸிங் செய்த நேபாள அணி 15 ஓவர்கள் வரை விக்கெட்களை இழந்தாலும் இந்தியாவுக்கு ஈடு கொடுத்து ரன் சேர்த்து இந்திய அணிக்கு பயத்தை காட்டியது.
சீனாவில் உள்ள சிறிய கிரிக்கெட் மைதானத்தில் தான் இந்தப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த ஆடுகளம் முழுக்க முழுக்க ஸ்பின் பந்துகளுக்கே ஒத்துழைப்பு அளிக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் என இரண்டு முழு நேர வேகப் பந்துவீச்சாளர்களும், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், ரவி பிஷ்னோய் என மூன்று ஸ்பின்னர்களும் இருந்தனர்.
ஆனால், இந்தப் போட்டியில் ஆவேஷ் கான் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஷாபாஸ் அஹமத் அணியில் சேர்க்கப்பட்டார். இவர் ஸ்பின்னர் மற்றும் பேட்டிங் ஆல் - ரவுண்டர் ஆவார். இதை அடுத்து இந்தியா நான்கு ஸ்பின்னர்கள், அர்ஷ்தீப் என்ற ஒரு வேகப் பந்துவீச்சாளருடன் களமிறங்க முடிவு செய்தது.
முதல் போட்டியில் வேகப் பந்துவீச்சு எடுபடாத நிலையில் இந்த முடிவை எடுத்தது இந்தியா. எனினும்ம் வேகப் பந்துவீசும் ஆல் - ரவுண்டரான சிவம் துபேவை நம்பியே இந்த பெரிய ரிஸ்கை இந்திய அணி எடுத்துள்ளது. சிவம் துபே முதல் போட்டியிலேயே படுமோசமாக பந்து வீசினார்.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பந்து வீசியது. எதிர்பார்த்தது போலவே சிவம் துபேவுக்கு ஒரு ஓவர் கொடுக்கப்பட்டது. அதில் அவர் 9 ரன்கள் கொடுக்கவே அதன் பின் அவருக்கு ஓவர் அளிக்கப்படவில்லை. மற்ற ஐந்து பந்துவீச்சாளர்களுடன், திலக் வர்மாவுக்கும் ஓவர் அளித்தார் கேப்டன் ருதுராஜ். திலக்கும் ஸ்பின்னர்தான். ஆக, இந்தியா ஐந்து ஸ்பின்னர்களை வைத்து வங்கதேச அணியின் 8 விக்கெட்களை சாய்த்தது. வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 1 விக்கெட் எடுத்தார்.
வங்கதேசம் 96 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. அடுத்து ஆடிய இந்திய அணி 9.2 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது. ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆன நிலையில், ருதுராஜ் 40, திலக் வர்மா 55 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது.