துபாய்: வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. முதல் 10 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோர் 96 ரன்களாக இருந்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 72 ரன்கள் மட்டுமே இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சேர்த்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேச அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஜேக்கர் அலி பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணி தரப்பில் சுப்மன் கில் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இவர்கள் இருவரும் நிதானமாக தொடங்கினர். தன்சிம் ஹசனின் அபார பவுலிங்கால் அபிஷேக் சர்மா அட்டாக் செய்ய முடியவில்லை.

இதனால் 3 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோர் 17 ரன்களாக மட்டுமே இருந்தது. ஆனால் 4வது ஓவரில் சுப்மன் கில் அட்டாக்கை தொடங்க, அபிஷேக் சர்மாவும் அதிரடியை தொடங்கினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் பவர் பிளே ஓவர்கள் முடிவில் 72 ரன்களாக உயர்ந்தது. அதாவது 4 முதல் 6 ஓவர்கள் வரையிலான 3 ஓவர்களில் 55 ரன்கள் விளாசப்பட்டது.
தொடர்ந்து சிக்ஸ் அடிக்க முயன்று சுப்மன் கில் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த சிவம் துபே 2 ரன்களில் வெளியேறினார். இதனிடையே அபிஷேக் சர்மா 25 பந்துகளில் அரைசதம் விளாசி, தனது பாணியில் ரன்களை குவிக்க தொடங்கினார். இதனால் 10 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோர் 96 ரன்களாக உயர்ந்தது.
ஆனால் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் வீசிய 12வது ஓவரில் அபிஷேக் சர்மா 37 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ரன் அவுட்டாகி வெளியேற, அந்த ஓவரின் கடைசி பந்தில் சூர்யகுமார் யாதவ் 11 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த திலக் வர்மாவும் 5 ரன்களில் ஆட்டமிழக்க, 15 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதையடுத்து ஹர்திக் பாண்டியா - அக்சர் படேல் கூட்டணி இணைந்தது. 12வது ஓவர் முதல் 17வது ஓவர் வரை வெறும் 27 ரன்களை மட்டுமே இந்திய அணி சேர்த்தது. இதனால் கடைசி 3 ஓவர்களில் பெரிய ரன்களை சேர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போது 18வது ஓவரை வீசிய தன்சிம் ஹசன் ஓவரில் 14 ரன்கள் சேர்க்கப்பட்டது.
தொடர்ந்து முஸ்தாஃபிசுர் ரஹ்மான் வீசிய 19வது ஓவரில் 9 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதையடுத்து சைஃபுதீன் வீசிய கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட, கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியாவும் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் வங்கதேச அணி வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.