டெல்லி: இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வெற்றிபெற வங்கதேச அணிக்கு 222 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி 74 ரன்களையும், நட்சத்திர வீரர் ரிங்கு சிங் 53 ரன்களும் விளாசி அசத்தினார்.
வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷான்டோ பவுலிங்கை தேர்வு செய்தார். பின்னர் இந்திய அணியின் சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரில் அதிரடியாக 3 பவுண்டரிகள் அடிக்கப்பட்டாலும், 2வது ஓவரிலேயே சஞ்சு சாம்சன் 10 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் 3வது ஓவரில் அபிஷேக் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணி 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் நிதிஷ் குமார் ரெட்டி - ரிங்கு சிங் கூட்டணி இணைந்தது. ரிங்கு சிங் தனது ஸ்டைலில் தேவையான பவுண்டரி, சிக்ஸ் அடித்து ரன் குவிக்க, நிதிஷ் குமார் ரெட்டி நிதானமான ஆடினார்.
ஆனால் மஹ்மதுல்லா வீசிய ஒரு ஓவரில் சிக்ஸ் மற்றும் பவுண்டரியை நிதிஷ் குமார் ரெட்டி அடிக்க, பின்னர் காட்டுத் தீ பற்றியதை போல் ஒவ்வொரு ஓவரிலும் சிக்சரும், பவுண்டரியுமாய் பொளந்து கட்டினார். ரிஷாத் ஹொசைன் வீசிய 10வது ஓவரில் மட்டும் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 24 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் நிதிஷ் குமார் ரெட்டி 27 பந்துகளில் அரைசதம் கடந்து வெளுத்து கட்டினார்.
இதனால் 12 ஓவர்கள் முடிவிலேயே இந்திய அணியின் ஸ்கோர் 122 ரன்களாக உயர்ந்தது. தொடர்ந்து மெஹதி ஹசன் மிராஸ் பவுலிங்கில் 13வது ஓவரில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 26 ரன்கள் அடிக்கப்பட, அடுத்த ஓவரிலேயே அதிரடியாக ஆடிய நிதிஷ் குமார் ரெட்டி 34 பந்துகளில் 7 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவும் அதிரடியாக விளையாட, ரிங்கு சிங் சைலண்டாக 26 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
சிறப்பாக ஆடிய அவரும் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் ஹர்திக் பாண்டியா மற்றும் ரியான் பராக் இருவரும் பொளந்து கட்டினர். ஹர்திக் பாண்டியா சிக்ஸ், பவுண்டரியில் விளாச, ரியான் பராக் கிடைத்த வாய்ப்பில் 2 சிக்சர்களை விளாசி 15 ரன்களில் வெளியேறினார். கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா 32 ரன்களிலும், வருண் சக்கரவர்த்தி டக் அவுட்டாகியும், அர்ஷ்தீப் சிங் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இறுதியாக இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்துள்ளது.