மும்பை : இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட நாட்கள் கழித்து இந்த தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி வரும் துலீப் கோப்பை முதல் சுற்றில் முடிவடைந்த பிறகு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்காக பல ஸ்டார் வீரர்களை துலீப் கோப்பை தொடரில் தேர்வு குழுவினர் தேர்வு செய்திருக்கிறார்கள்.

இதில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்க கூடும்.
மூன்றாவது வீரராக சுப்மன் கில்லுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கில், தன்னுடைய திறமையை நிரூபித்ததால் அவர் தன்னுடைய இடத்தை பிடித்து விடுவார். நான்காவது இடத்தில் இந்திய அணி நட்சத்திர வீரர் விராட் கோலி இடம் பெறுவார். தற்போது ஐந்தாவது இடத்தில் யார் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் ஸ்ரேயாஸ், தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார். கே எல் ராகுல் பெரிய அளவில் தன்னுடைய ஃபார்மை நிரூபிக்கவில்லை. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய சர்பராஸ்கானுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆறாவது வீரராக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துலீப் கோப்பை தொடரில் முதலில் நின்று பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனால் இந்திய அணி நிர்வாகம் பண்டுக்கு வாய்ப்பு கொடுக்குமா? இல்லை ஏற்கனவே இங்கிலாந்து தொடரில் அபாரமாக விளையாடிய துருவ் ஜூரலுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏழாவது வீரராக ஜடேஜாவும் எட்டாவது வீரராக அக்சர் பட்டேலும் இந்திய அணியில் விளையாடக்கூடும்.
ஒன்பதாவது வீரராக தமிழகத்தை சேர்ந்த அஸ்வினை தேர்வு குழு சேர்க்கலாம். இதே போன்று பத்தாவது வீரராக முஹம்மது சிராஜ் 11-வது வீரராக ஆர்ஸ்திப் சிங் விளையாடக்கூடும். இதே போன்று கூடுதலாக வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார், சுழற் பந்துவீச்சாளர் குல்திப் யாதவ், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் சேர்க்கப்படலாம். பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேச அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வீழ்த்திருப்பதால் அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. இதனால் பலமான அணியே தேர்வு செய்யப்படலாம்.