துபாய்: ஆசிய கோப்பை யு19 தொடரின் அரையிறுதி சுற்றில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது.
ஆசிய கோப்பை தொடரில் யு19 வீரர்களுக்கான அரையிறுதி போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா அணியை எதிர்த்து வங்கதேச அணி களமிறங்கியது. யு19 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - வங்கதேசம் இடையில் ஏற்கனவே ரைவல்ரி இருப்பதால், இந்த போட்டியில் எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

இந்த நிலையில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ரஹ்மான் ரப்பி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி தரப்பில் ஆடார்ஷ் சிங் - அர்ஷின் குல்கர்னி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ஆடார்ஷ் சிங் 2 ரன்களிலும், அர்ஷின் குல்கர்னி ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த கேப்டன் சஹரன் டக் அவுட்டாகி வெளியேறினார்.
பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 15.5 ஓவர்களில் 61 ரன்களுக்கு இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து முஷீர் கான் - முருகன் அபிஷேக் கூட்டணி இணைந்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக ஆடிய முஷீர் கான் 62 பந்துகளில் 50 ரன்களும், முருகன் அபிஷேக் 73 பந்துகளில் 62 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 42.4 ஓவர்களில் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
பின்னர் வந்த வங்கதேச அணிக்கும் தொடக்கம் அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் அஸ்லாம் டக் அவுட்டாகியும், ரிஸ்வான் 13 ரன்களிலும், ஆஷுக்குர் ரஹ்மான் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேச அணி 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் இந்திய அணி வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்ட நிலையில், இஸ்லாம் - அமின் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இவர்களின் விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் இந்திய அணி பவுலர்கள் திணறினர். குறிப்பாக இஸ்லாம் அதிரடியாக ஆடி அரைசதம் கடக்க, வங்கதேச அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஒரு கட்டத்தில் இஸ்லாம் சதத்தை நெருங்கிய சூழலில், 94 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் வந்த முகமது ஜேம்ஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் வங்கதேச அணி 42.5 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதன் மூலம் ஆசிய கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியுள்ளது.