மண்ணின் மைந்தனிடம் சிக்கிய வங்கதேசம்.. சிதறடித்த அஸ்வின்.. 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரம்
சென்னை: வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. 515 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேசம் அணி, அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சுழலில் சிக்கி வெறும் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி அஸ்வினின் அபார சதம் காரணமாக 376 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய வங்கதேசம் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் காரணமாக இந்திய அணி 227 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கியது.

2வது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியாக சதம் விளாசியதால், இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 287 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதனால் 515 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் வங்கதேசம் அணி பேட்டிங்கை தொடங்கியது. 3வது நாள் ஆட்டம் நேர முடிவில் வங்கதேசம் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்திருந்தது.
இதன்பின் ஷான்டோ - ஷகிப் அல் ஹசன் இருவரும் 4வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். பும்ரா மற்றும் சிராஜ் வீசிய ஓவர்களை கவனமாக எதிர்கொண்ட இருவரும், விக்கெட் கொடுக்க கூடாது என்பதில் தீவிரமாக இருந்தனர். இவர்களின் பார்ட்னர்ஷிப் 50 ரன்களை நெருங்கிய போது, கேப்டன் ரோஹித் சர்மா மண்ணின் மைந்தனான அஸ்வினை அட்டாக்கில் கொண்டு வந்தார்.
அவர் வீசிய முதல் ஓவரிலேயே ஷகிப் அல் ஹசனை 25 ரன்களில் வீழ்த்தி பெவிலியனுக்கு அனுப்பி வைக்க, மறுபக்கம் ஜடேஜா அதிரடி வீரரான லிட்டன் தாஸை 1 ரன்னில் வீழ்த்தினார். பின்னர் அஸ்வினை அட்டாக் செய்ய முயற்சித்த மெஹதி ஹசன் மிராஸ் 8 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே சிறப்பாக ஆடி வந்த கேப்டன் ஷான்டோவை 82 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜா வீழ்த்தினார்.
பின்னர் அடுத்த ஓவரில் மீண்டும் டஸ்கின் அஹ்மத் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்த, வங்கதேசம் அணி 228 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தவிர்க்க போராடி வந்தது. தொடர்ந்து ஜடேஜா பந்தில் ஹசன் மஹ்முத் 7 ரன்களில் போல்டாகி வெளியேறினார். இதன் மூலமாக இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. சிறப்பாக பவுலிங் அஸ்வின் 6 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதன் மூலமாக 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications