துபாய்: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்ற நிலையில், ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி 169 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்த போதும், பும்ரா மற்றும் குல்தீப் யாதவின் அபார பவுலிங்கால் இந்திய அணி அசத்தல் வெற்றியை பெற்றிருக்கிறது.
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 போட்டியில் வங்கதேச அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. இந்தப் போட்டியில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 169 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. இந்திய அணி தரப்பில் அபிஷேக் சர்மா மட்டும் 37 பந்துகளில் 75 ரன்களை விளாசினார். இதனால் வங்கதேச அணி வெல்வதற்கு வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வங்கதேச அணி தரப்பில் சைஃப் ஹசன் - தன்சித் ஹசன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் பும்ரா வீசிய 2வது ஓவரிலேயே தன்சித் ஹசன் 1 ரன்னில் ஆட்டமிழக்க, பர்வேஸ் ஹொசைன் களமிறக்கப்பட்டார். இதன்பின் வங்கதேச அணி நிதானமாக ரன்களை சேர்த்தது. பும்ரா ஓவரில் எந்தவித ரிஸ்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் 5வது ஓவரில் அட்டாக்கில் வந்த வருண் சக்கரவர்த்தியை 3 பவுண்டரி அடித்து ஒரு பேட்ஸ்மேன்களும் விளாசினர். அதேபோல் பும்ரா ஓவரில் ஒரு சிக்ஸ் பறக்க, இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் வங்கதேச அணி 6 ஓவர்களில் 44 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து குல்தீப் யாதவ் பவுலிங்கில் பர்வேஸ் 21 ரன்களில் ஆட்டமிழக்க, ஹிர்டாய் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த ஷமீம் ஹொசைன் டக் அவுட்டாகியும், கேப்டன் ஜேக்கர் அலி 4 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். ஆனால் அதிரடி சிக்சர்களை விளாசிய சைஃப் ஹசன் 36 பந்துகளில் அரைசதத்தை விளாசினார். தொடர்ந்து அவர் அதிரடியாக ஆடிய, மறுமுனையில் எந்த பேட்ஸ்மேனும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
ஒரு கட்டத்தில் வங்கதேச அணியின் வெற்றிக்கு கடைசி 5 ஓவர்களில் 61 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சைஃப் ஹசன் அதிரடியாக சிக்ஸ் விளாசினாலும், ரிஷாத் ஹொசைன் 2 ரன்களிலும், டன்சிம் ஷகிப் டக் அவுட்டாகியும் வெளியேறினார். இறுதியாக சைஃப் ஹசனும் 51 பந்துகளில் 5 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 69 ரன்கள் எடுத்து வெளியேற, வங்கதேச அணியின் தோல்வி உறுதியானது.
தொடர்ந்து திலக் வர்மா வீசிய கடைசி ஓவரில் முஸ்தாசுர் ரஹ்மான் 6 ரன்களில் ஆட்டமிழக்க, வங்கதேசம் அணி 19.3 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று, ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.