ஆன்டிகுவா : வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. வங்கதேசம் அணி வீரர்கள் பெயரளவிற்கு கூட அதிரடி காட்டாத சூழலில், 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி அரையிறுதி சுற்றில் ஒரு காலினை வைத்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் விளாசியது. அதிகபட்சமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா 50 ரன்களும், விராட் கோலி 37 ரன்களும் சேர்த்தனர். இதன்பின் வங்கதேசம் அணி தரப்பில் லிட்டன் தாஸ் - தான்சித் ஹசன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

இவர்கள் இருவரும் முதல் 2 ஓவர்கள் நிதானம் காத்த நிலையில், அடுத்த 2 ஓவர்களில் அதிரடியாக அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினர். பின்னர் 5வது ஓவரை வீச ஹர்திக் பாண்டியா அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் லிட்டன் தாஸ் சிக்சர் அடிக்க, வங்கதேசம் அணி ரசிகர்களின் கரகோஷம் எகிறியது. ஆனால் அடுத்த பந்திலேயே காற்றின் திசையை வைத்து லிட்டன் தாஸ் விக்கெட்டை வீழ்த்தி ஹர்திக் பாண்டியா அசத்தினார். வங்கதேசம் அணியில் உள்ள ஒரே அதிரடி வீரரான லிட்டன் தாஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்ததால், இந்திய அணியின் கைகள் ஓங்கியது.
இதன்பின் கேப்டன் ஷான்டோ - தான்சித் கூட்டணி இணைந்து நிதானமாக விளையாடியது. திடீரென ரன் ரேட் உயர்வதை அறிந்த ஷான்டோ, ஹர்திக் பாண்டியா பவுலிங்கில் 2 சிக்சரை விளாசினார். ஆனாலும் வங்கதேசம் அணி 9 ஓவர்களில் 64 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதன்பின் குல்தீப் யாதவ் அட்டாக்கில் வந்தார். அவர் வீசிய 10வது ஓவரில் தான்சித் ஹசன் 29 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஹிர்டாய் 4 ரன்களிலும், ஷகிப் அல் ஹசன் 11 ரன்களிலும் வெளியேறினர்.
ஒரு வழியாக 14 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 100 ரன்களை எட்டியது. இதன்பின் பும்ரா மீண்டும் அட்டாக்கில் வந்தார். அவரின் பவுலிங்கில் அட்டாக் செய்ய முயன்ற ஷான்டோ 32 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து வெளியேற, விக்கெட் கீப்பர் ஜேக்கர் அலி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் கடைசி 3 ஓவர்களில் வங்கதேசம் வெற்றிக்கு 75 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது களமிறங்கிய ரிஷாத் ஹொசைன் அதிரடியாக சில சிக்சர்களை விளாசி அதிர்ச்சி கொடுத்தார்.
பின்னர் பும்ரா வேகத்தில் ரிஷாத் ஹொசைன் 10 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியாக வங்கதேசம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே சேர்த்து. இதன் மூலம் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலமாக டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்று வாய்ப்பும் இந்திய அணிக்கு பிரகாசமாகியுள்ளது.