குவாலியர்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. வங்கதேச அணி நிர்ணயித்த 128 ரன்கள் இலக்கை வெறும் 11.5 ஓவர்களில் இந்திய அணி சேஸிங் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி குவாலியர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி 19.5 ஓவர்களில் 127 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பின் இந்திய அணி தரப்பில் சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரிலேயே சஞ்சு சாம்சன் அபாரமாக 2 பவுண்டரிகளை விளாச, டஸ்கின் அஹ்மத் வீசிய 2வது ஓவரில் அபிஷேக் சர்மா ஒரு சிக்ஸ், 2 பவுண்டரிகளை விளாசி அசத்தினார்.
ஆனால் அந்த ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் சர்மா 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ரன் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் கேப்டன் சூர்யகுமார் யாதவ் - சஞ்சு சாம்சன் கூட்டணி பவுண்டரி, சிக்ஸ் என்று பொளந்து கட்டியது. முஷ்தாஃபிசுர் ரஹ்மான் பவுலிங்கில் சூர்யகுமார் சிக்ஸ் அடிக்க, சஞ்சு சாம்சன் பவுண்டரி அடித்து மிரட்டினார்.
தொடர்ந்து டஸ்கின் அஹ்மத் பவுலிங்கில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி அடித்து சூர்யகுமார் யாதவ் சூறாவளி இன்னிங்ஸை தொடங்கினார். பின்னர் முஷ்தாஃபிசுர் ரஹ்மான் பந்திலும் சிக்ஸ் அடித்த சூர்யகுமார் யாதவ், அடுத்த பந்தில் மற்றொரு சிக்ஸ் அடிக்க முயன்று 14 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் ரியான் பராக் வருவார் என்று பார்க்கப்பட்ட போது, நிதிஷ் குமார் ரெட்டி களம் புகுந்தார்.
தொடர்ந்து பவர் பிளே ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 71 ரன்களை சேர்த்திருந்தது. பின்னர் ஸ்பின்னர்கள் அட்டாக்கில் வர, மெஹதி ஹசன் மிராஸை அட்டாக் செய்ய முயன்ற சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் நிதிஷ் குமார் ரெட்டி - ஹர்திக் பாண்டியா கூட்டணி இணைந்தது. இருவரும் அதிரடியாக விளையாட, இந்திய அணியின் ஸ்கோர் 9.3 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.
பின்னர் ஹர்திக் பாண்டியா தனது ஸ்டைலில் பொளந்து கட்ட தொடங்கினார். டஸ்கின் அஹ்மத் வீசிய 12வது ஓஅவ்ரில் அடுத்தடுத்து 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியாக இந்திய அணி 11.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 39 ரன்களை விளாசி அசத்தினார்.