ஹாங்சோ: வங்கதேச அணிக்கு எதிரான ஆசிய போட்டிகள் அரையிறுதியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
ஆசிய போட்டிகளின் கிரிக்கெட் பிரிவு ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் முன்னேறின. அரையிறுதி போட்டியில் வென்றாலே இந்திய அணியால் பதக்கத்தை உறுதி செய்ய முடியும். இந்த நிலையில் அரையிறுதி போட்டியில் வங்கதேசம் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் தமிழக வீரர்களான சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
இதையடுத்து இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. கடந்த போட்டியில் சதம் விளாசிய ஜெய்ஸ்வால், இந்தப் போட்டியில் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து ருதுராஜ் உடன் திலக் வர்மா இணைந்தார். 2 ஓவர்கள் நிதானம் காட்டிய ருதுராஜ், 3வத்ஜு ஓவரிலேயே விஸ்வரூபம் எடுத்தார்.
வங்கதேச அணியின் ரிபன் மோண்டல் வீசிய 3வது ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி என்று 21 ரன்களை விளாசி தள்ளினார் ருதுராஜ் கெய்க்வாட். இதையடுத்து திலக் வர்மாவும் அதிரடியில் வெளுத்து கட்ட, இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சிறப்பாக ஆடிய திலக் வர்மா 25 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன் காரணமாக 8 ஓவர்கள் முடிவிலேயே இந்திய அணி 82 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 9.2 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றிபெற்றது. இதன் மூலம் இந்திய அணி ஆசிய போட்டிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. மேலும், ஆசிய போட்டிகளில் பதக்கத்தை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.