ஐதராபாத்: டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் விளையாடிய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ்-க்கு டிஎஸ்பி பதவி வழங்கி தெலங்கானா அரசு கெளரவம் செய்துள்ளது. இதன் காரணமாக ரசிகர்கள் அனைவரும் சோசியல் மீடியாவில் டிஎஸ்பி சிராஜ் என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
17 ஆண்டுகளுக்கு பின் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரை வென்று இந்திய அணி புதிய சாதனை படைத்தது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தியா திரும்பிய வீரர்களுக்கு மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதேபோல் பிசிசிஐ சார்பில் ரூ.125 கோடி பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. இந்த டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு இந்திய அணியின் அனைத்து வீரர்களும், பயிற்சியாளர்களும், உதவியாளர்களும் முக்கியக் காரணமாக அமைந்தனர். அதேபோல் மும்பையில் நடந்த கொண்டாட்டத்திற்கு பின், ஐதராபாத் திரும்பிய முகமது சிராஜ்-க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திறந்தவெளி காரில் நின்று ஐதராபாத் நகரில் வெற்றிப் பேரணியில் முகமது சிராஜ் ஈடுபட்டார். அவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி வாழ்த்து கூறினர். அதேபோல் தெலங்கானா அரசு தரப்பிலும் முகமது சிராஜ் நேரில் அழைக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த முகமது சிராஜ்-க்கு அரசுப் பணி அளிக்கப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அளித்த வாக்குறுதியை அம்மாநில அரசு நிறைவேற்றியுள்ளது. இன்று இந்திய அணி வீரர் முகமது சிராஜ்-க்கு டிஎஸ்பி பொறுப்பு வழங்கி அம்மாநில அரசு சிறப்பு கெளரம் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு முகமது சிராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத் வீரரான முகமது சிராஜ் இந்திய அணியின் முக்கியமான வீரராக செயல்பட்டு வருகிறார். அவருக்கு அம்மாநில அரசு அளித்துள்ள கெளரவம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் "டிஎஸ்பி முகமது சிராஜ்" என்று பதிவிட்டு சோசியல் மீடியாவில் வாழ்த்து கூறி வருகின்றனர்.