சென்னை: இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தாமாக முன் வந்து இளம் வீரர் ஆகாஷ் தீப்புக்கு பேட் ஒன்றை பரிசளித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த பேட்டில் விராட் கோலியின் கையெழுத்தை பெற்றுக் கொண்ட ஆகாஷ் தீப், அதில் கடைசி வரை விளையாடாமல் பாதுகாப்பேன் என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இந்திய இளம் வீரர் ஆகாஷ் தீப், வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி அசத்தியுள்ளார். குறைந்த ஓவர்களை வீசினாலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். புதிய பந்தில் அற்புதமாக ஸ்விங் செய்யும் பவுலராக உயர்ந்துள்ளார்.

இந்திய அணியின் சீனியர் வீரரான முகமது ஷமி காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் நிலையில், அவரது இடத்தை ஆகாஷ் தீப் பிடித்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு ஆகாஷ் தீப் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணிக்காக 2 போட்டிகளை விளையாடிய அனுபவம் குறித்து ஆகாஷ் தீப் பகிர்ந்துள்ளார்.
அதில், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. ஏனென்றால் நான் விளையாடிய அணிகளிலேயே ரோஹித் சர்மா தான் சிறந்த கேப்டன். ஏனென்றால் ஒரு சகோதரரைப் போல் இளம் வீரர்களுக்கு வழிகாட்டுவார். இந்திய அணிக்காக ஆடிய 2 போட்டிகளிலும் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது.
ஒரு வேகப்பந்துவீச்சாளராக அனைத்து சூழல்களுக்கும், பிட்ச்களுக்கும் ஏற்ப செயல்பட வேண்டும். அப்போது தான் விரைவாக கற்றுக் கொள்ள முடியும். அதேபோல் எனது பவுலிங்கில் புதிதாக எந்த சோதனைகளை செய்ய வேண்டாம் என்று நினைத்திருக்கிறேன். பேட்ஸ்மேன்களை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அதனால் என் மீது நானே அதிக அழுத்தத்தை கொடுக்க விரும்பவில்லை.
இந்திய அணி எப்போதும் எதிரணிக்கு ஏற்ப திட்டங்களை மாற்றாது. நாங்கள் எப்போதும் ஒரே திட்டத்துடன் தான் விளையாடி வருகிறோம். இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா என்று எந்த அணியாக இருந்தாலும் ஒரே திட்டம் தான். அதேபோல் வங்கதேசம் டெஸ்ட் தொடரின் போது தான் விராட் கோலி முதல்முறையாக இணைந்து களமிறங்கினேன்.
இந்த போட்டியின் போது சுவாரஸ்யமான விஷயம் ஒன்று நடந்தது. திடீரென என்னை அழைத்து, உனக்கு பேட் தேவைப்படுகிறதா என்று கேள்வி கேட்டார். ஏன் அந்த கேள்வியை விராட் கோலி கேட்டார் என்று தெரியவில்லை. ஒருவேளை எனது பேட்டிங்கில் ஏதாவது பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன். விராட் கோலியிடம் இருந்து யார் தான் பேட் வேண்டாம் என்று சொல்வார்கள்.
எவ்வளவு பெரிய லெஜண்ட் அவர். நான் பேட் வேண்டும் என்று சொன்ன பின், எந்த மாதிரியான பேட்டை பயன்படுத்துவாய் என்று கேட்டார். அப்போது நான், பையா.. நீங்கள் கொடுக்கும் பேட்டை நான் பயன்படுத்தப் போவதில்லை. விராட் கோலியிடம் கிடைத்த மிகப்பெரிய பரிசு அது. எனது ரூமில் என்றும் அது இருக்கும். அந்த பேட்டில் விராட் கோலியின் ஆட்டோகிராஃபை கூட பெற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.