துபாய்: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 25 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 24 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், அடுத்தடுத்த போட்டிகளில் அரைசதம் அடித்து வியக்க வைத்திருக்கிறார்.
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேச அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஜேக்கர் அலி பவுலிங்கை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் வெல்லும் அணி கிட்டத்தட்ட இறுதிப்போட்டிக்கு முன்னேற அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இதன்பின் இந்திய அணி தரப்பில் அபிஷேக் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. வங்கதேச அணி தரப்பில் தன்சிம் ஹசன் ஷாகிப் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், நாசும் அஹ்மத் வீசிய 2வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. 3வது ஓவரில் அபிஷேக் சர்மா கொடுத்த கேட்சை விக்கெட் கீப்பர் ஜேக்கர் அலி தவறவிட்டார்.
இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் 4வது ஓவர் முதல் இந்திய அணி தனது வேலையை காட்டியது. அபிஷேக் சர்மா 9 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், 4வது ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்து அதிரடியை தொடங்கினார். இதன்பின் தனது பாணியில் மைதானத்தில் சுற்றி சுற்றி சுழன்று அடித்தார். அதில் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் வீசிய ஓவரில் 2 சிக்சர்கள் பறந்தது.
அபிஷேக் சர்மாவின் அதிரடி காரணமாக பவர் பிளே ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 72 ரன்களை குவித்தது. இதன்பின் சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 25 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா அடிக்கும் 4வது அரைசதம் இதுவாகும். ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் 24 பந்துகளில் அபிஷேக் சர்மா அரைசதம் அடித்திருந்தார்.
தற்போது வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலும் 25 பந்துகளில் அரைசதம் அடித்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார். இதன் மூலமாக ஆசியக் கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் அபிஷேக் சர்மா முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இதுவரை 200 ரன்களுக்கு மேல் விளாசிய ஒரே பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா தான் என்பது குறிப்பிடத்தக்கது.