சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்து உள்ளது. வேகப் பந்துவீச்சாளர் பும்ராவுக்கு இரண்டாவது போட்டியின் போது ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்தியா - வங்கதேசம் மோத உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி :

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல், சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிசிசிஐ முதல் போட்டிக்கான அணியை மட்டுமே அறிவித்து இருந்தது. இரண்டாவது போட்டிக்கான அணியை அறிவிக்காமல் இருந்ததன் பின்னணியில் சில விஷயங்கள் சொல்லப்பட்டது.
வேகப் பந்துவீச்சாளர் பும்ராவுக்கு இரண்டாவது போட்டியில் ஓய்வு அளிக்கப்படும் எனவும், முதல் போட்டியில் சரியாக ஆடாத வீரர்களுக்கு பதிலாக இரண்டாவது போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. முதல் போட்டியில் கே எல் ராகுல் சரியாக விளையாடவில்லை. அவரது டெஸ்ட் போட்டி பேட்டிங் சராசரி மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து உள்ளது.
இந்த நிலையில், அவருக்கு பதிலாக சர்ஃபராஸ் கான் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் எனக் கூறப்பட்டது. சர்ஃபராஸ் கான் ஏற்கனவே உத்தேச அணியில் மாற்று வீரராக இடம் பெற்று இருக்கிறார். இந்த நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கே எல் ராகுல் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகிய இருவருமே உத்தேச அணியில் இடம் பெற்று உள்ளனர்.
ஒரு வேளை பிளேயிங் லெவனில் மட்டும் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளித்துவிட்டு, யாஷ் தயாள் வேகப் பந்துவீச்சாளராக அணியில் விளையாட வாய்ப்பு உள்ளது, அதேபோல, கே எல் ராகுலுக்கு ஓய்வு அளித்துவிட்டு, சர்ஃபராஸ் கான் போட்டியில் களம் இறங்கவும் வாய்ப்பு உள்ளது.
ஆனால், அந்த முடிவை கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் எடுப்பார்கள் என தெரிகிறது. தேர்வுக் குழு இரண்டாவது போட்டிக்கான அதே உத்தேச அணியை அறிவித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டது. வங்கதேச டெஸ்ட் தொடரின் முடிவில் இந்திய வீரர்களின் செயல்பாட்டை வைத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியில் மாற்றங்கள் இருக்கலாம் என பிசிசிஐ தரப்பில் கூறப்படுகிறது.
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் வரும் செப்டம்பர் 27 அன்று துவங்க உள்ளது. முதல் போட்டியில் எளிதாக வென்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியிலும் அதேபோல வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.