மும்பை: வங்கதேச அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இந்திய அணியில் இளம் வீரர்களான மயங்க் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் 2வது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்கதேசம் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

அக்டோபர் 6 முதல் அக்டோபர் 12 வரை நடக்கவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த டி20 தொடரில் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நட்சத்திர வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், துருவ் ஜுரெல், பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ், அக்சர் படேல் உள்ளிட்ட அனைவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியில் அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வேகப்பந்துவீச்சாளர்களாக அனுபவ வீரர் அர்ஷ்தீப் சிங், இளம் வீரர்களான ஹர்சித் ராணா மற்றும் மயங்க் யாதவ் கொண்டு வரப்பட்டுள்ளனர். அதேபோல் ஸ்பின்னர்களாக ரவி பிஷ்னாய் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் நீண்ட நாட்களுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். ஜிம்பாப்வே டி20 தொடரில் விளையாடிய ரவி பிஷ்னாய்-க்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
2021 டி20 உலகக்கோப்பைக்கு பின் இந்திய அணிக்கு வருவதற்கு கடினமான போராடிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மீண்டும் இந்திய அணிக்கு வந்துள்ளார். அதேபோல் ஹர்சித் ராணா, வருண் சக்கரவர்த்தி மற்றும் மயங்க் யாதவ் ஆகியோரின் தேர்வுக்கு பின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முக்கிய பங்காற்றி இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இவர்கள் மூவரும் ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகளுக்காக விளையாடி வருகின்றனர். நேரடியாக இவர்கள் மூவரின் திறமையையும் பார்த்துள்ளதால், அணித் தேர்வில் கம்பீரின் முடிவு முக்கியத்துவம் பெற்றிருக்கும். பல புதிய வீரர்கள் விளையாடவுள்ளதால், இந்த டி20 தொடர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.