சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த முதல் போட்டியிலேயே வங்கதேச அணியை ஆதிக்கம் செலுத்தி வீழ்த்த வேண்டும் என்பதில் இந்திய அணி உறுதியாக உள்ளது. சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என வெற்றி பெற்று இருந்தது.
அதற்கு முக்கிய காரணம் வங்கதேச அணியின் வேகப்பந்துவீச்சாளர் நஹித் ராணா. அவர் ஒரு போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார். அவர் 6 அடி 5 அங்குலம் உயரம் கொண்டவர் ஆவார். அதன் காரணமாக அவரால் இயல்பாகவே அதிக பவுன்ஸ் செய்து பந்தை வீச முடிகிறது.

இந்திய வீரர்களுக்கு பவுன்ஸ் ஆகி வரும் பந்துகள் எப்போதுமே சிக்கலாகவே இருக்கும். உதாரணத்திற்கு தென்னாப்பிரிக்காவில் இந்தியா இதுவரை ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றதில்லை. அதற்கு முக்கிய காரணம் அங்கு இருக்கும் பிட்சுகளில் பந்து அதிகமாக பவுன்ஸ் ஆகும் என்பதுதான். அதே போல, நஹித் ராணா அதிக பவுன்ஸ் வீசும் ஆற்றல் கொண்டவர் என்பதால் அவரை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அணி முடிவு செய்தது.
அதற்காக பஞ்சாபை சேர்ந்த கர்னூர் பிரார் என்ற 24 வயது வேகப்பந்துவீச்சாளரை வலை பயிற்சியில் பந்து வீச அழைத்துள்ளது இந்திய அணி. அவர் 6 அடி 4.5 அங்குலம் உயரம் கொண்டவர் ஆவார். அதன் மூலம் நஹித் ராணா வீசும் அதே உயரத்தில் இவரும் பந்து வீச முடியும். வலைப் பயிற்சியில் கர்னூர் பிராரை எதிர்கொள்வதன் மூலம் நஹித் ராணாவின் பந்துவீச்சை சந்திக்கும் போது இந்திய வீரர்களுக்கு சற்று எளிதாக இருக்கும்.
இதன் காரணமாகவே இந்த முயற்சியை இந்திய அணி மேற்கொண்டு உள்ளது. இந்த டெஸ்ட் தொடரிலிருந்து இந்தியா அணியின் பவுலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்கல் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவரும் உயரமான பந்துவீச்சாளர் ஆவார். எனவே, அவர் இந்திய வீரர்களுக்கு பவுன்ஸ் பந்துகளை குறித்த அறிவுரைகளை வழங்கி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கதேச வீரர்கள் சென்னைக்கு வர உள்ளனர். அவர்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்படும் என பிசிசிஐ கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.