சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படவுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த டெஸ்ட் அணியில் 634 நாட்களுக்கு பின் இந்திய அணி ரிஷப் பண்ட் திரும்பவுள்ள நிலையில், நட்சத்திர வீரர்களான பும்ரா, முகமது ஷமி உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்று தகவல் கிடைத்துள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வங்கதேசம் அணி வீழ்த்தி இருப்பதால், ரசிகர்கள் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வங்கதேசம் அணி, அடுத்த வாரத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்திய அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேசம் அணி விளையாடவுள்ளது. செப்.19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியும், செப்.27ஆம் தேதி கான்பூர் மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டியும் நடக்கவுள்ளது. இதன் மூலமாக இந்திய அணி தங்களின் ஹோம் சீசனை தொடங்கவுள்ளது.
பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்திய வங்கதேசம் அணியின் கேப்டன் ஷான்டோ, எதிர்வரும் இந்திய அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். அதற்காக வீரர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று கூறி பரபரப்பை பற்ற வைத்துள்ளார். இதனால் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வங்கதேசம் அணி கடுமையான சவாலளிக்கும் என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் 634 நாட்களுக்கு பின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் இடம்பெற உள்ளது தெரிய வந்துள்ளது. 2022ஆம் ஆண்டு நடந்த கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், நீண்ட ஓய்வுக்கு பின் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு திரும்பினார்.
அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட், இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் விளையாடினார். இந்த நிலையில் அடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கம்பேக் கொடுக்கவுள்ளார். அதேபோல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை மிஸ் செய்த விராட் கோலி, மீண்டும் இந்திய அணிக்கு திரும்பவுள்ளார்.
அதேபோல் துலீப் டிராபி முதல் சுற்று போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு அளிக்கப்படாது என்று கூறப்படுகிறது. இதனால் வழக்கம் போல் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்கம் வீரர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். அதேபோல் மிடில் ஆர்டரில் சர்ஃபராஸ் கானுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வழக்கம் போல் ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல் மற்றும் ரவீந்திரா ஜடேஜா ஆகியோர் ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் அணிக்கு திரும்பவுள்ளனர். அதேபோல் ரிஷப் பண்ட் மட்டுமல்லாமல் மற்றொரு விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெலும் இடம்பெறவுள்ளார். கூடுதல் ஸ்பின்னராக குல்தீப் யாதவ், வேகப்பந்துவீச்சாளராக முகமது சிராஜ், முகேஷ் குமார் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.
அதேபோல் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஆகாஷ் தீப் மற்றும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சீனியர் வீரரான கேஎல் ராகுல், சுப்மன் கில் ஆகியோரும் தேர்வு செய்யப்படவுள்ளனர். கம்பீர் கம்பீருக்கு முதல் டெஸ்ட் தொடர் என்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.