மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட்டுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. 2022 டிசம்பர் மாதம் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி ஓராண்டுக்கு மேல் கிரிக்கெட் விளையாட முடியாத நிலையில் இருந்தார். கடந்த 2024 ஐபிஎல் தொடர் முதல் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இந்திய டி20 அணியிலும் இடம் பிடித்து இருக்கிறார். அவர் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என விபத்துக்கு முன் தன்னை நிரூபித்து இருந்த நிலையில், அடுத்து நடக்க உள்ள வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், தற்போது அந்த இடத்துக்கு இஷான் கிஷன் குறி வைத்து இருக்கிறார். இந்திய அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐ பேச்சை மீறி, உள்ளூர் போட்டிகளில் பங்கேற்காததால் இஷான் கிஷன் சில மாதங்களாக இந்திய அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்தார். தற்போது அவரை மீண்டும் அணியில் சேர்க்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
முதற்கட்டமாக அவர் பிசிசிஐ நடத்தும் துலீப் டிராபி தொடரில் பங்கேற்க உள்ளார். அதற்கு முன்னதாக அவர் புச்சி பாபு டெஸ்ட் தொடரில் பங்கேற்று இருக்கிறார். அதில் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக அவர் செயல்பட்டு வருகிறார். முதல் நாள் ஆட்டத்தில் அவர் விக்கெட் கீப்பிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு தேர்வுக் குழுவை ஈர்த்து இருக்கிறார்.
மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மூன்று அற்புதமான கேட்ச்களை பிடித்தார் இஷான் கிஷன். அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை அடுத்து இஷான் கிஷன் டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் இடத்துக்கு போட்டி போட துவங்கி இருக்கிறார் என பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். அடுத்து அவர் பேட்டிங்கிலும் தன்னை நிரூபித்தால் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
ரிஷப் பண்ட் 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் இலங்கை டி20 தொடரில் பங்கேற்ற போதும் அவர் இதுவரை தனது தேர்வை நியாயப்படுத்தும் இன்னிங்க்சை ஆடவில்லை. எனவே, அவர் டெஸ்ட் அணியில் இடம் பெறவேண்டும் என்றால் துலீப் ட்ராபி தொடரில் அவர் அதிக ரன் குவித்து, பெரிய இன்னிங்க்ஸ் ஒன்றை ஆட வேண்டும்.