சென்னை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி துலீப் டிராபி தொடரில் ஒரு போட்டியில் விளையாட முன் வந்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் தெரிவித்துள்ளார். துலீப் டிராபி தொடரில் விளையாடி இருந்தால் இடதுகை ஸ்பின்னர்களை எதிர்கொள்ள விராட் கோலிக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் உள்ள எந்த தெருவுக்குள் சென்றாலும் எளிதாக வேகப்பந்துவீச்சாளர்களை கண்டறிந்து கொண்டு வர முடியும் என்று சொல்வார்கள். இம்ரான் கான், வாசிம் அக்ரம், வாக்கர் யூனுஸ் உள்ளிட்டோரின் தாக்கத்தால் பாகிஸ்தான் மண்ணில் ஏற்பட்ட விளைவு அது. அதேபோல் தற்போது வங்கதேசம் மண்ணில் திரும்பிய பக்கமெல்லாம் இடதுகை ஸ்பின்னர்கள் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷகிப் அல் ஹசனின் எழுச்சியால் நடந்த விளைவாகவே இதனை பார்க்கலாம். இந்த நிலையில் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்.19ஆம் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்பாக இந்திய அணி வீரர்கள் அனைவரும் 5 நாட்கள் நடக்கும் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர்.
ஹோம் சீசன் தொடங்கவுள்ள நிலையில், 43 நாட்களுக்கு பின் இந்திய அணி வீரர்கள் கிரிக்கெட் களத்திற்கு திரும்பியுள்ளனர். முதல் நாள் பயிற்சி முகாமில் விராட் கோலி 45 நிமிடங்கள் தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் விராட் கோலிக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்பை இழந்துவிட்டதாக முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் கூறியுள்ளார்.
அதில், வங்கதேசம் அணியில் சிறந்த ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஒரு தெருவுக்குள் சென்றால், 3ல் ஒருவர் இடதுகை ஸ்பின்னராக தான் இருக்கிறார்கள். இதனால் வங்கதேசம் அணியின் ஸ்பின் பவுலிங்கை எளிதாக கடந்து சென்றுவிட முடியாது. குறிப்பாக இந்திய அணியின் விராட் கோலிக்கு இடதுகை ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் சிக்கல் உள்ளது. ஒருவேளை துலீப் டிராபியின் முதல் போட்டியில் விராட் கோலி விளையாட முன் வந்திருந்தால், அது அவருக்கு சிறந்த பயிற்சியாக அமைந்திருக்கும்.
என்ன தான் நெட்ஸில் பேட்டிங்கில் பல நேரம் பயிற்சி மேற்கொண்டாலும், ஒரு கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு ஈடாகாது. ஒரு போட்டியில் களமிறங்கி பேட்டிங் செய்வது என்பது 100 நெட் செஷனுக்கு சமமானதாகும். இதனால் நான் விராட் கோலிக்கு அட்வைஸ் செய்கிறேன் என்று பார்க்க தேவையில்லை. எனக்கு விராட் கோலி துலீப் டிராபியில் விளையாட இருக்க வேண்டும் என்று தோன்றியது. ஏனென்றால் துலீப் டிராபியில் விளையாடி இருந்தால், இந்திய மண்ணில் ஸ்பின்னர்களை எதிர்கொள்வதற்கான திட்டத்தை அறிந்திருக்க முடியும்.
ஏனென்றால் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியே 9 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இதனால் துலீப் டிராபி களம் அவரின் நினைவை மீண்டும் கிளறிவிடுவதற்கான வாய்ப்பாக அமைந்திருக்கும். அதனை விராட் கோலி தவறவிட்டுள்ளதாக கருதுவதாக தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக விராட் கோலி ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் திண்டாடி வருகிறார். டி20 கிரிக்கெட்டில் கூட ஸ்பின்னர்களை அட்டாக்கிங் பாணியிலேயே எதிர்கொண்டும் வரும் விராட் கோலி, டிஃபென்ஸ் ஆடுவதில் சில பின்னடைவை சந்தித்துள்ளார். இதனால் ஹோம் சீசனில் விராட் கோலியின் டிஃபென்ஸ் நிச்சயம் சோதிக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது.