குவாலியர்: இந்திய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் பவுலிங் செய்வதற்கு தயாராக இருப்பது மிகச்சிறந்த விஷயம் என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். எந்த நேரத்தில் யாரை பவுலிங் செய்ய வைக்கலாம் என்ற முடிவை எடுப்பதற்கு கடினமாக இருந்தாலும், ஏராளமான வாய்ப்புகள் இருக்கும் போது அது சுகமான தலைவலியாக மாறியுள்ளதாக கூறியுள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 19.5 ஓவர்களில் 127 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணியின் வருண் சக்கரவர்த்தி மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 11.5 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்து சாதனை படைத்தது. சிறப்பாக ஆடிய ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 39 ரன்கள் விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். 49 பந்துகளில் போட்டியை இந்திய அணி முடித்ததன் மூலமாக புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக பந்துகளை மீதம் வைத்த வென்ற போட்டி இதுதான்.
அதேபோல் இந்திய அணியின் 12வது தொடர் வெற்றி இதுவாகும். 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறது. இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், எங்களின் திறமையை நம்பி, அதற்கேற்ப திட்டமிட்டு செயல்பட்டோம். அணி மீட்டிங்கில் எடுத்த முடிவுகள் அனைத்தும் களத்தில் சரியாக செயல்படுத்தப்பட்டது.
புதிய மைதானத்தில் விளையாடிய போதும், வீரர்கள் அனைவரும் பிடிவாதமாக இருந்து சிறப்பாக செயல்பட்டனர். இந்திய அணி வீரர்களின் பேட்டிங்கை பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. களத்தில் ஏராளமான பவுலர்கள் பவுலிங் செய்ய தயாராக இருக்கும் போது, யாரை தேர்வு செய்வது என்பது கேப்டனுக்கு சுகமான தலைவலி தான்.
அதேபோல் எந்த சூழலிலும் கூடுதல் ஆப்ஷன்கள் இருக்கும் போது, இந்திய அணிக்கு நன்மையை கொடுக்கும். இந்திய அணி இன்னும் சில விஷயங்களில் முன்னேற்றம் அடைய வேண்டிய தேவை உள்ளது. அடுத்த போட்டிக்கு முன்பாக அந்த விஷயங்கள் குறித்து பேசுவோம் என்று தெரிவித்துள்ளார். டாஸ் வென்ற போது பவுலிங்கை தேர்வு செய்து, அதற்கேற்ப திட்டங்களுடன் இந்திய அணி களத்தில் செயல்பட்டது.
அதேபோல் பேட்டிங்கில் எந்த வீரர் எப்போது வருவார் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. ஏனென்றால் ரியான் பராக், ரிங்கு சிங் உள்ளிட்டோர் இருந்த போது, தொடர்ச்சியாக கம்பீர் வலதுகை பேட்ஸ்மேன்களை களமிறக்கியது ஆச்சரியம் அளித்தது. இது ரசிகர்களுக்கு கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியது.