கான்பூர்: வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் செஷனில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறிய நிலையில், இளம் வேகப்பந்துவீச்சாளரான ஆகாஷ் தீப் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். கடந்த 60 ஆண்டுகளில் இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்தது இதுவே முதல்முறையாகும்.

இதனால் கான்பூர் மைதானம் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கிறதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. ஏற்கனவே மழை பெய்த ஈரம் காயாததால், டாஸ் போடுவதற்கு தாமதமானது. இதன் காரணமாகவே இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்ததாக பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வங்கதேசம் அணியின் ஜாகீர் ஹசன் - ஷத்மான் இஸ்லாம் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
அதேபோல் இந்திய அணி தரப்பில் முதல் ஸ்பெல்லை பும்ரா மற்றும் சிராஜ் வீசினர். இவர்கள் இருவரையும் நிதானமாக எதிர்கொண்ட வங்கதேசம் அணி பேட்ஸ்மேன்கள், கொஞ்சம் கூட ரிஸ்க் எடுக்க முன்வரவில்லை. இவர்கள் இருவரும் தலா 4 ஓவர்கள் வீதம் 8 ஓவர்கள் வீசியிருந்தனர். அப்போது வங்கதேசம் அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்திருந்தது.
ஜாகீர் ஹசன் 21 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமலும், ஷத்மான் இஸ்லாம் 27 பந்துகளில் 21 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். அப்போது கேப்டன் ரோஹித் சர்மா உடனடியாக 3வது வேகப்பந்துவீச்சாளரான ஆகாஷ் தீப்பை அட்டாக்கில் கொண்டு வந்தார். அவர் வீசிய 3வது பந்திலேயே ஜாகீர் ஹசன் அடித்த பந்தை கல்லி திசையில் ஃபீல்டிங் நின்றிருந்த ஜெய்ஸ்வால் அபாரமாக டைவ் அடித்து கேட்ச் பிடித்து அசத்தினார்.
இதனால் ஜாகீர் ஹசன் 24 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஷத்மான் இஸ்லாமை எல்பிடபிள்யூ முறையில் ஆகாஷ் தீப் வீசி 24 ரன்களில் வெளியேற்றினார். எல்பிடபிள்யூ அப்பீலின் போது நடுவர் அவுட் கொடுக்காத போது, ஆகாஷ் தீப் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் மன்றாடி டிஆர்எஸ் எடுக்க வைத்தார். இதற்கு ரோஹித் சர்மா சம்மதித்த அப்பீல் செய்ய, அவுட் என்று வந்தது.
இதன் காரணமாக வங்கதேசம் அணி 29 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த கேப்டன் ஷான்டோ - மோமினுல் இருவரும் நிதானமாக விளையாடி, தேவைக்கேற்ப பவுண்டரிகளையும் விளாசி ரன்கள் குவித்தனர். இதன் மூலமாக உணவு இடைவேளை முடிவில் வங்கதேசம் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 74 ரன்கள் சேர்த்தது.
இந்திய அணியின் பும்ரா, சிராஜ் இருவரும் முதல் செஷனில் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று தீவிரமாக போராடினர். ஆனால் இருவருக்கும் ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை. ஆனால் ஆகாஷ் தீப் இரு தொடக்க வீரர்களையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். இதனால் முகமது ஷமிக்கு சரியான மாற்று வீரராக ஆகாஷ் தீப் உருவாகியுள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.