மும்பை : இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20, ஒருநாள் போட்டிக்கு பிறகு சுமார் 40 நாட்களுக்கு மேல் எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இந்திய அணி இருந்தது. தற்போது இந்திய அணி வரும் செப்டம்பர் 19ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு பல்வேறு தொடர்களில் விளையாடுகிறது.
வரும் செப்டம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள், அக்டோபர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள், நவம்பர் மாதம் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடர்.

நவம்பர் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஜனவரி மாதம் வரை 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா பங்கேற்கிறது. அதன் பின்பு இங்கிலாந்துக்கு எதிராக மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் மார்ச், ஏப்ரல், மே மாதத்தில் ஐ பி எல் தொடர், பின்பு ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் வரை இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் என தொடர்ந்து இந்தியா விளையாடப் போகிறது.
அடுத்த ஒரு வருடத்தில் இந்திய அணி 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு இருக்கிறது. அடுத்த இரண்டு மாதத்தில் 5 டெஸ்ட் போட்டிகளும், அடுத்த ஐந்து மாதத்தில் 10 டெஸ்ட் போட்டிகளும் நடைபெற இருக்கிறது. இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் பும்ராவின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதனால் பும்ரா, முகமது சிராஜ், ஷமி போன்ற வீரர்கள் இனி ஐந்து மாதத்திற்கு தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தான் விளையாட போகிறார்கள். இதனால் வங்கதேசத்துக்கு எதிரான மூன்று டி20 போட்டி கொண்ட தொடரில் பும்ரா, சிராஜ், ஷமி ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் டி20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அவர்களை சோதித்து பார்க்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு வரை இனி பும்ரா, சிராஜ் போன்ற பவுலர்களை நாம் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தான் பார்க்க முடியும். கடந்த டி20 உலக கோப்பைக்கு பிறகு பும்ரா இரண்டு மாதங்களாக எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்தார். இதற்கு காரணம் பும்ரா வரிசையாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட போவதால் அவருக்கு முன்கூட்டியே பிசிசிஐ ஓய்வு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் அவரை மட்டுமே நம்பி இருப்பது சரியான விஷயமாக இருக்காது என்பதிலும் தேர்வு குழு எச்சரிக்கையுடன் செயல்பட்டு இருக்கிறது. இதனால் தான் பும்ரா ஏதேனும் காயம் என விலகி விட்டால் அவருக்கு மாற்று வீரர் யார் என்பதை முடிவு செய்ய துலீப் கோப்பை தொடரில் பல வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் பல இளம் வீரர்கள் நல்ல வேகத்துடன் பந்து வீசினாலும் பும்ராவை போல் வித்தியாசமாக அறிவுபூர்வமாக செயல்படும் பவுலரை இன்னும் பிசிசிஐ கண்டுபிடிக்கவில்லை என்பது தான் குறிப்பிடத்தக்கது.