மும்பை: வங்கதேசம் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் கம்பேக் கொடுக்க வாய்ப்பு குறைவு என்றே பார்க்கப்படுகிறது. ரிஷப் பண்ட்-க்கு ஓய்வு அளிக்கப்பட்டாலும், பேக் அப் விக்கெட் கீப்பராக ஜித்தேஷ் சர்மாவை கொண்டு வர பிசிசிஐ தேர்வுக் குழு ஆர்வம் காட்டி வருவது தெரிய வந்துள்ளது.
இந்தியா - வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடருக்கு பின், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ளன. அக்.6ஆம் தேதி குவாலியர் மைதானத்தில் முதல் டி20 போட்டியும், அக்.9ஆம் தேதி டெல்லி மைதானத்தில் 2வது டி20 போட்டியும், அக்.12ஆம் தேதி ஐதராபாத் மைதானத்தில் 3வது டி20 போட்டியும் நடக்கவுள்ளது. இதற்கான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தயாராகி வருகிறது.

அதேபோல் டெஸ்ட் சீசன் தொடங்கியுள்ளதால், நட்சத்திர வீரர்களான சுப்மன் கில், ரிஷப் பண்ட், ஜஸ்பிரிட் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது. இவர்களுக்கு பதிலாக ஜிம்பாப்வே மற்றும் இலங்கை டி20 தொடர்களில் சிறப்பாக ஆடிய வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரியான் பராக், ரிங்கு சிங், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் மீண்டும் களமிறங்கவுள்ளனர். அதேபோல் ரிஷப் பண்ட்-க்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு அளிக்கப்படவுள்ளதால், முதன்மை விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் விளையாடவுள்ளார்.
இலங்கை டி20 தொடரில் மோசமாக விளையாடினாலும், துலீப் டிராபி தொடரில் சஞ்சு சாம்சன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது. இதனால் பேக் அப் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியது.
ஆனால் தேர்வுக் குழுவினர் இஷான் கிஷனுக்கு மாற்றாக ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மிடில் ஆர்டரில் சரியாக பொருந்துவார் என்பதோடு, டி20 உலகக்கோப்பைக்கு முன் இந்திய அணியில் இருந்தவர். இதனால் ஜித்தேஷ் சர்மாவுக்கு முதல் வாய்ப்பை அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதா என்ற பார்க்கப்பட்ட போது, ஜிம்பாப்வே டி20 தொடரில் சதம் விளாசிவிட்டு அபிஷேக் சர்மா காத்திருக்கிறார். இதனால் இடதுகை பேட்ஸ்மேனுக்கான வரிசையில் அபிஷேக் சர்மா முன் நிற்கிறார். ஏற்கனவே இராணி கோப்பைக்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் விளையாட இஷான் கிஷன் தேர்வாகியுள்ளார்.
இதனால் வங்கதேசம் டி20 தொடருக்கு தேர்வாகுவது கடினம் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் வங்கதேசம் டி20 தொடர் மற்றும் இராணி கோப்பை போட்டி இரண்டுக்கும் இடையில் ஒருநாள் கூட இடைவெளி இல்லை. இதனால் இஷான் கிஷன் ரஞ்சி சீசனில் விளையாடி மீண்டும் திறமையை நிரூபித்தால் மட்டுமே இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது.