மும்பை: இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸை கொண்டு வர வேண்டும் என்று கவுதம் கம்பீர் அளித்த பரிந்துரையை பிசிசிஐ ஏற்காதது தெரிய வந்துள்ளது. இதனால் சோகமடைந்துள்ள ஜான்டி ரோட்ஸ், பிசிசிஐ நிர்வாகம் வெளிநாட்டு பயிற்சியாளர்களை விரும்பாததும் காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற பின் அவருக்கு உறுதுணையாக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென்டஸ்காட்டே ஆகியோரை துணைப் பயிற்சியாளராகவும், பவுலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்கலையும் பரிந்துரை செய்தார். அதேபோல் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார்.

ஆனால் கவுதம் கம்பீரின் மற்ற பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட பிசிசிஐ, ஃபீல்டிங் பயிற்சியாளருக்கான பரிந்துரையை மட்டும் ஏற்கவில்லை. ஏனென்றால் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் சிறப்பாக செயல்பட்டதோடு, அவர் பதக்கம் மூலமாக வீரர்களுக்கு புதிய வகையில் ஊக்கமளித்து வருகிறார். டி திலீப்பின் அணுகுமுறை கம்பீருக்கும் ஓரளவு பிடித்து போனதால், எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
கவுதம் கம்பீர் - ஜான்டி ரோட்ஸ் கூட்டணி லக்னோ அணியில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இதன் காரணமாகவே ஜான்டி ரோட்ஸை ஒப்பந்தம் செய்ய கம்பீர் பரிந்துரை செய்திருந்தார். ஏற்கனவே ஜான்டி ரோட்ஸ் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட விரும்பிய நிலையில், இம்முறை கம்பீர் பரிந்துரை செய்த போதும் அவரால் இந்திய அணியின் பயிற்சியாளராக வர முடியவில்லை.
இதுகுறித்து தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் பேசுகையில், கவுதம் கம்பீர் பரிந்துரை செய்தது உண்மை தான். ஆனால் இந்திய அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் தேவையில்லை என்று முடிவில் நிர்வாகம் இருப்பதாக நினைக்கிறேன். ஆனால் நான் ஒன்றும் வெளிநாட்டு பயிற்சியாளர் கிடையாது. நானும் லோக்கல் தான். கோவாவில் தான் தங்கியிருக்கிறேன். எனக்கு என்னமோ, அடுத்ததாக மெட்ரோ சிட்டியில் வசித்தால், இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக வர முடியும் என்று கருதுகிறேன்.
அதேபோல் கடந்த 2 இந்திய ஃபீல்டிங் பயிற்சியாளர்களுக்கும் நிச்சயம் தலைவணங்குகிறேன். பயிற்சியாளர்கள் ஸ்ரீதர் மற்றும் டி திலீப் இருவரும் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அதற்கு கேப்டன்சியும் முக்கியமான இருந்தது. தோனியின் கேப்டன்சியின் கீழ் அவர் முன்னின்று ஃபிட்னஸின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். இதன் காரணமாகவே 42 வயதிலும் ஐபிஎல் தொடரில் அவரால் விளையாட முடிகிறது. இன்றும் அதி விரைவாக ரன்களை எடுக்க முடிகிறது.
அதன்பின் விராட் கோலி கேப்டன்சிக்கு வந்த பின், ஃபிட்னஸை அணிக்குள் ஒரு கலாச்சாரமாக கொண்டு வந்தார். யோ-யோ டெஸ்டில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று விதிகளை கொண்டு வந்தார். இதனால் அனைவரும் சமமாக பார்க்கப்பட்டனர். இதுதான் இந்திய அணியின் ஃபீல்டிங் முன்னேறுவதற்கு முக்கியமான காரணம் என்று தெரிவித்துள்ளார். கம்பீரின் அனைத்து பரிந்துரைகளும் பிசிசிஐ-யால் ஏற்கப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், ஃபீல்டிங் பயிற்சியாளருக்கான பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.