கான்பூர்: வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த மைதானத்தில் உள்ள சி ஸ்டாண்ட் அபாயகரமான நிலையில் இருப்பதாகவும், அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் அங்கு ஒரே நேரத்தில் இருந்தால் அந்த மாடி உடைந்து கீழே விழுந்து விடக் கூடும் எனவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
உதாரணத்திற்கு ரிஷப் பண்ட் சிக்ஸ் அடித்தால், அதைக் கொண்டாட அங்கு இருக்கும் 10,000 ரசிகர்களும் குதித்தால் அந்த மாடி அதை தாங்காது என பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் கூறி இருந்தார். அந்த புகாருக்கு உத்தரப் பிரதேச கிரிக்கெட் அமைப்பின் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. அடுத்து இரண்டாவது போட்டி கான்பூரில் உள்ள கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனையும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் கான்பூர் மைதானத்தை ஆய்வு செய்துவிட்டு அந்த மைதானத்தில் உள்ள சி ஸ்டாண்ட் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், ரிஷப் பண்ட் ஒரு சிக்ஸ் அடிக்கும் போது அதை கொண்டாடுவதற்காக ரசிகர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் குதித்தால் அந்த மாடி உடைவதற்கு வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டு இருந்தார்.
அதனால் அந்த பகுதியில் குறைந்த அளவிலேயே டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், அதற்கு விளக்கம் அளித்து இருக்கிறார் உத்தர பிரதேச மாநில கிரிக்கெட் அமைப்பைச் சேர்ந்த அதிகாரி சஞ்சய் கபூர். இது குறித்து அவர் பேசுகையில், "அனைத்துமே ஆதாரம் அற்ற வதந்திகள் மட்டுமே. எங்களுக்கு ரசிகர்களின் பாதுகாப்பில் அக்கறை உள்ளது. அந்த பால்கனியில் உள்ள 10,000 இருக்கைகளில் 7,200 டிக்கெட்டுகளை மட்டும் விற்குமாறு எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நாங்கள் மீதம் உள்ள 2800 இருக்கைகளுக்கான டிக்கெடுகளை விற்கவில்லை." என்றார்.
மேலும், "இந்த எண்ணிக்கை குறைப்பை செய்த பிறகும் எங்கள் மைதானத்தின் ஒட்டுமொத்த இருக்கைகளின் எண்ணிக்கை முந்தைய எண்ணிக்கை விட 6,000 என்ற அளவில் அதிகரித்து உள்ளது. தற்போது 26,007 இருக்கைகள் எங்கள் மைதானத்தில் இந்த போட்டிக்காக ஒதுக்கப்பட்டு இருக்கிறது." என்றார்.
கான்பூர் மைதானத்தில் உள்ள மின் விளக்குகள் சரியாக வேலை செய்யவில்லை என்ற புகாரும் எழுந்திருந்தது. அதற்கு பதில் அளித்த அந்த அதிகாரி, "மின்விளக்குகள் எல்லாம் சரியாக வேலை செய்கின்றன. அனைத்தையும் பரிசோதனை செய்து பார்த்து இருக்கிறோம். இந்த போட்டியின் போது வானிலையால் ஏற்படும் மாற்றங்களுக்கு எதிராகவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். பொதுப்பணித்துறை கடந்த செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தது. அவர்கள் மேற் கூரையில் இருந்த இரும்பு தடுப்புகளை குறித்து எங்களிடம் சுட்டிக்காட்டி இருந்தார்கள். அந்தப் பகுதியில் மட்டும் நாங்கள் 2,000 இருக்கைக்கான டிக்கெட்களை மட்டும் விற்க உள்ளோம்." என்றார்.