கான்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் மழையே பெய்யாத நிலையிலும் மூன்றாவது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அம்பயர்கள் வேண்டுமென்றே இந்த முடிவை எடுத்தார்களா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
மூன்றாவது நாள் அன்று அம்பயர்கள் மைதான ஊழியர்களிடம் எதனால் போட்டியை தாமதம் செய்கிறோம், ஆடுகளத்தில் எந்த இடத்தில் மழை நீர் தேங்கி இருக்கிறது? எதை சரி செய்ய வேண்டும் என கடைசி வரை சொல்லவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக இந்த போட்டியில் மழை பெய்ததால் முதல் இரண்டு நாள் ஆட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டது. முதல் நாள் அன்று 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இரண்டாவது நாள் மழையால் முற்றிலுமாக கைவிடப்பட்டது. மூன்றாவது நாள் அன்று போட்டி நேரத்தில் மழை பெய்யவில்லை. எனினும், ஆடுகளத்தில் மழை நீர் லேசாக தேங்கி இருந்தது. அதை ஊழியர்கள் விரைவாக அகற்றினர்.
அதனால், மூன்றாவது நாள் அன்று நிச்சயம் அரை நாளாவது ஆட்டம் நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அம்பயர்கள் தாமதம் செய்து கொண்டு இருந்தனர். மூன்று முறை ஆடுகளத்தை பரிசோதித்த அவர்கள், மதியம் 2 மணிக்கு மூன்றாவது நாள் ஆட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். ஒரு சொட்டு மழை கூட பெய்யாத நிலையிலும் மூன்றாவது நாள் ஆட்டம் நடக்காதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மைதானத்தில் பிட்ச்சை நிர்வகித்து வரும் ஊழியர் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை கூறி இருக்கிறார். "மூன்றாவது நாள் அன்று அம்பயர்கள் மூன்று முறை ஆடுகளத்தை சோதனை செய்தனர். சில பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதாக அவர்கள் கருதினர். அம்பயர்கள் எங்களிடம் என்ன பிரச்சனை? எதை சரி செய்ய வேண்டும்? என கடைசி வரை சொல்லவே இல்லை. நீங்கள் போட்டியை துவங்கலாம் என நாங்கள் பலமுறை கூறினோம். என்ன பிரச்சனை என்பதை எங்களிடம் சொல்லுங்கள். நாங்கள் அதை சரி செய்கிறோம் என்றோம். ஆனால் அவர்கள் கடைசி வரை என்ன பிரச்சனை என்று எங்களிடம் சொல்லவில்லை." என்று கூறி இருக்கிறார் அந்த ஊழியர்.
இதை அடுத்து அம்பயர்கள் வேண்டுமென்று மூன்றாவது நாள் ஆட்டத்தை ரத்து செய்ய வேண்டி தாமதம் செய்தார்களா? என்ற சர்ச்சை வெடித்துள்ளது. முன்னதாக நொய்டாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி மழையே பெய்யாத போதும் ஐந்து நாட்களும் நடைபெறவில்லை. அந்த மைதானத்தின் மழைநீர் வடிகால் வசதி மோசமாக இருந்தது.
ஆனால், கான்பூர் மைதானத்தில் அதுபோன்று சிக்கல் எதுவும் இல்லை. மைதானம் முழுமையாக பிளாஸ்டிக் உறைகளால் மூடப்பட்டு இருந்தது. அதை தாண்டி ஆடுகளத்தின் சில பகுதிகளில் மழை நீர் தேங்கி இருந்தது. அந்தப் பகுதிகளையும் ஊழியர்கள் சரி செய்து விட்டனர். ஆனாலும், அம்பயர்கள் போட்டியை துவங்கவில்லை.
இனி நான்காவது மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இந்த போட்டியில் ஏதேனும் ஒரு அணி வெற்றி பெறுவது என்பது கடினமாக மாறி உள்ளது. இந்தப் போட்டி டிரா ஆனால் அது இந்தியாவுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் பின்னடைவை ஏற்படுத்தும். அந்த வகையில் அம்பயர்கள் எடுத்த முடிவு இந்திய அணியை பாதித்து உள்ளது.