கான்பூர்: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு நாட்கள் ஆட்டம் நடைபெற வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. கான்பூரில் உள்ள கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் இந்த போட்டி இன்று (செப்டம்பர் 27) துவங்க உள்ளது. ஆனால், நேற்று முதல் கான்பூரில் பலத்த மழை பெய்து வருகிறது.
தற்போதைய சூழ்நிலையில் மைதானத்தின் அனைத்து பகுதிகளும் பிளாஸ்டிக் உறைகளால் மூடப்பட்டு இருக்கிறது. போட்டியின் முதல் நாளான இன்றும் கடுமையான மழை பெய்யும் என வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலை 9.30 மணிக்கு போட்டி துவங்க வேண்டும். அந்த சமயத்தில் 18 சதவீத அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அது குறைவான அளவு என்பதால் அப்போது டாஸ் போடப்பட்டு போட்டி துவங்க வாய்ப்பு உள்ளது.

ஆனால், அதன் பின் 10:30 மணி முதல் மாலை 7 மணி வரை கடுமையான மழை பொழிவு இருக்கும் என வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதனால், முதல் நாள் அன்று போட்டி நடப்பது சந்தேகமாக மாறி உள்ளது. முந்தைய நாள் இரவில் இருந்து மழை பெய்து உள்ளதால் மைதானத்தின் சில பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்க கூடும். அதை சரி செய்தால் மட்டுமே டாஸ் போடப்படும். அதனால், டாஸ் போடுவதிலும் சிக்கல் எழலாம்.
இரண்டாம் நாள் ஆட்டத்தின் போதும் மழை கடுமையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனால், முதல் இரண்டு நாட்கள் ஆட்டம் நடைபெறுவது சந்தேகமே. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இருந்தது. அடுத்து கான்பூர் மைதானத்தில் நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி எளிதாக வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் மழை அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.
தற்போது இந்த போட்டியில் இரண்டு நாட்கள் மட்டுமே முழுமையாக நடைபெற வாய்ப்பு உள்ளது. அதனால், இந்த போட்டி டிராவில் முடிவடையலாம் என்ற கணிப்பும் உள்ளது. அப்படி நடந்தால் 2023 - 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியலில் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படும்.