மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு அனுபவமிக்க சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது கே எல் ராகுல் தான். எனினும், அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைத்துவிடவில்லை என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசி இருக்கிறார்.
கடந்த சில மாதங்கள் முன்பு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இடையே கே எல் ராகுல் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். அவருக்கு பதிலாக சர்ஃபராஸ் கான் இந்திய அணியில் இடம் பெற்றார். அவர் மூன்று போட்டிகளில் மூன்று அரை சதம் அடித்த நிலையில், தற்போது மீண்டும் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்று இருக்கிறார்.

வங்கதேச டெஸ்ட் தொடரில் கே எல் ராகுலுக்கும் இந்திய அணியில் இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது. சர்ஃபராஸ் கான் மாற்று வீரராகவே இடம் பெற்று இருக்கிறார் எனவும், கே எல் ராகுல் தான் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் எனவும் இந்திய அணி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளான். ஆனாலும், ஆகாஷ் சோப்ரா கூறுகையில், இந்திய அணியில் கே எல் ராகுலுக்கு எதிரான சூழ்நிலை உருவாக்கப்படும் என குறிப்பிட்டு இருக்கிறார்.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் நிழலின் கீழேயே கே எல் ராகுல் செயல்பட்டு வருவதாகவும், ஒரு சில போட்டிகளில் அவர் சரியாக விளையாடாமல் போனால் அணியை விட்டு நீக்குவதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டுவிடும் என்றும் குற்றம் சுமத்தி இருக்கிறார்.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், "கே எல் ராகுலை ஒரு வீரராக எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அவர் அதிக ரன்கள் சேர்க்க வேண்டும். அவர் தொடர்ந்து ரன் குவித்துக்கொண்டே இருந்தால் முன்னேறிச் செல்லலாம். அவருடைய தலைவிதி எப்படி இருக்கிறது என்றால், எப்போதும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் நிழலிலேயே இருக்க வேண்டியதாக உள்ளது. அவர்கள் மிகப்பெரிய வீரர்கள். ராகுல் சிறந்த திறமைசாலி, சிறந்த வித்தைக்காரர். அவர் தொடர்ந்து விளையாடி அதிக ரன்கள் குவிக்க வேண்டும்" என்றார்.
மேலும், "அவர் அணியின் முக்கிய வீரர் என சொல்லப்பட்டாலும் அவருக்கு எதிரான சூழ்நிலை இந்திய அணியில் விரைவில் உருவாக்கப்படும். நிறைய பேர் அவருக்கு எதிராக இருக்கிறார்கள். எனவே, அவர் நீண்ட காலம் இந்திய அணியில் இடம் பெற முடியாது. என்னை கேட்டால் அவர் அதிக ரன்கள் குவித்து இருக்கிறார். கடினமான சூழ்நிலைகளில் ரன் சேர்த்து இருக்கிறார். அவருக்கு இந்திய அணியில் நீண்ட கால அடிப்படையில் வாய்ப்பு அளிக்க வேண்டும்." இவ்வாறு ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார்.
அடுத்து வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 19 அன்று சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெறும். முதல் டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுல் நிச்சயமாக பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.