கான்பூர்: தென்னாப்பிரிக்கா மண்ணில் மிகச்சிறந்த இன்னிங்ஸை ஆடியதை போல் இந்திய மண்ணிலும் தரமான இன்னிங்ஸை கேஎல் ராகுல் வெளிப்படுத்துவார் என்று இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார். கடந்த போட்டியின் 2வது இன்னிங்ஸை கேஎல் ராகுல் சிறப்பாக தொடங்கியதாக கூறிய அபிஷேக் நாயர், கம்பீருடன் கேஎல் ராகுல் நேரம் செலவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் களமிறங்கி அசத்தலான சதம் ஒன்றை கேஎல் ராகுல் விளாசினார். இதன் மூலமாக இந்திய அணியின் மிடில் ஆர்டரில் நம்பிக்கையான வீரராக கேஎல் ராகுல் மாறினார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டிலும் சிறப்பாக விளையாடி 86 ரன்கள் சேர்த்த கேஎல் ராகுல், அதன்பின் காயம் காரணமாக ஓய்வுக்கு சென்றார்.

அதன்பின் ஐபிஎல் தொடர், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், துலீப் டிராபி என்று எந்த தொடரிலும் கேஎல் ராகுலின் முழு திறமையும் வெளிப்படவில்லை. தற்போது வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 16 ரன்களிலும், 2வது இன்னிங்ஸில் 22 ரன்களும் சேர்த்தார். 2வது இன்னிங்ஸில் 22 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது.
இதனால் கேஎல் ராகுலின் பேட்டிங் ஃபார்ம் மீது கவலை ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பேசுகையில், சில நேரங்களில் பேட்ஸ்மேன்கள் ஃபார்முக்கு வருவதற்கு சில நேரம் பிடிக்கும். தென்னாப்பிரிக்கா மண்ணில் கேஎல் ராகுல் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதேபோன்ற ஆட்டத்தை நானும், கவுதம் கம்பீரும் இணைந்து அவரிடம் இருந்து வெளிக் கொண்டு வருவோம் என்று நம்புகிறோம். இந்திய அணிக்காக விளையாடும் போது யாருக்கும் எந்த ஊக்கமும் தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் இந்திய அணிக்காக விளையாடுவதே மிகப்பெரிய ஊக்கம் தான். சில நேரங்கள் பேட்ஸ்மேன்கள் சரியான பாதையில் செல்ல மாட்டார்கள். அவர்களுக்கு இதுதான் பாதை என்று சொல்ல வேண்டிய கடமை பயிற்சியாளர்களுக்கு இருக்கிறது.
கேஎல் ராகுல் அப்படியான சிக்கலில் தான் இருக்கிறேன் என்று நினைக்கிறேன். அவருடன் கடந்த சில நாட்களாக கவுதம் கம்பீர் நேரம் செலவிட்டு வருகிறார். இந்திய கிரிக்கெட்டில் தங்களின் ஆட்டத்தை நன்றாக உணர்ந்த வீரர்களில் கேஎல் ராகுலும் ஒருவர் என்று தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடிய கேஎல் ராகுல், சொந்த மண்ணில் மோசமாக விளையாடி வருவதை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.