துபாய்: வங்கதேசத்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சுப்மன் கில் சதம் அடித்தது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதே சமயம் இந்திய அணியை சிக்கலில் இருந்து மீட்ட மற்றொரு பேட்ஸ்மேன் கே.எல். ராகுல்.
இந்தப் போட்டியில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து 228 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 229 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்தது. ரோஹித் சர்மா 41, விராட் கோலி 22 ரன்களில் ஆட்டமிழந்து இருந்தனர்.

நான்காம் வரிசையில் பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் ஐயர் 17 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அக்சர் பட்டேல் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 31வது ஓவரிலேயே நான்கு விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது வெற்றிக்கு 85 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.
போட்டி நடைபெற்ற துபாய் மைதானம் மந்தமாக இருந்ததால், அந்த ரன்களை எடுப்பதற்குள் விக்கெட்டுகளை இழப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருந்தன. அப்போது ஆறாம் வரிசையில் இறங்கிய கே.எல். ராகுல் பொறுப்பாக விளையாடினார். பவுண்டரி அடிக்க வேண்டும் என அவர் அவசரப்படவில்லை.
இடையே ஒரு கேட்ச் வாய்ப்பை அவர் கொடுத்திருந்தார். ஆனால் அதிலிருந்து தப்பினார். அதன் பின் இன்னும் கவனமாக விளையாடினார் ராகுல். சுப்மன் கில் விரைவாக ரன்கள் சேர்க்க உதவினார். சுப்மன் கில்லும், கே.எல். ராகுலும் ரன் ரேட் அதிகமாக இல்லை என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப ஆடினர். 46.3 ஓவர்களில் இந்திய அணி 231 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அப்போது சுப்மன் கில் சதம் அடித்து 101 ரன்களுடன் களத்தில் இருந்தார். கே.எல். ராகுல் 47 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து, கே.எல். ராகுல் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியிலேயே இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.