மும்பை : வேம்புலியே அடிக்கிற அளவுக்கு உன்னிடம் பலம் இருக்கலாம். ஆனால் அதற்காக எல்லாம் ரோசை வீழ்த்த முடியாது என்று சார்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியார் கூறும் பிரபலமான வசனம் தான் இது. வங்கதேச அணியின் பயிற்சியாளர் சந்திக்கா ஹத்துருசிங்கா தங்கள் அணி வீரர்களுக்கு இதை கூறினால் சரியாக இருக்கும்.
ஆம் பாகிஸ்தான் அணியை தங்களது வரலாற்றில் முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய வங்கதேசம் தொடரையும் இரண்டுக்கு பூஜ்ஜியும் என்ற கணக்கில் வென்று இருக்கிறது. ஒரு பெரிய அணியை வீழ்த்தினால் நிச்சயமாக அதிலிருந்து ஒரு நம்பிக்கையும் உத்வேகமும் கிடைக்கும்.

ஆனால் நம்பிக்கை அதிகமாக மாறினால் நிச்சயம் அது ஆபத்துதான் கொடுக்கும். வங்கதேச அணி பலமாக இருந்தாலும், இந்தியாவை வீழ்த்துவது என்பது மிகவும் கடுமையான விஷயமாகும். ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவும் வங்கதேசமும் 13 முறை மோதி இருக்கிறார்கள். இதில் ஒரு முறை கூட வங்கதேச அணி வென்றதில்லை.இதனால் பாகிஸ்தானை வீழ்த்தி விட்டோம்.
இனி அடுத்த சவால் காத்திருக்கிறது என்ற கண்ணோட்டத்தில் வங்கதேசம் அணியினர் பயிற்சியை மேற்கொண்டால், இந்தியாவுக்கு கடும் சவால் அளிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஓவர் கான்ஃபிடென்சில் விளையாடினால் நிச்சயம் அடி விழும். இந்த நிலையில் இதை சரியாகப் புரிந்து கொண்டுள்ள வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் இந்தியா தொடர் நிச்சயம் அவ்வளவு எளிதாக இருக்காது என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், பாகிஸ்தானில் நாங்கள் பெற்ற வெற்றி சிறப்பானது தான். ஆனால் அதை அங்கேயே விட்டுவிட்டு அடுத்த சவாலை நோக்கி செல்வதுதான் சரியான விஷயமாக இருக்கும். ஊடகங்களும் அதற்கு உதவி செய்ய வேண்டும். பாகிஸ்தான் அணிக்கு எதிராக நாங்கள் பெற்ற வெற்றியை பெரிதுபடுத்தி தொடர்ந்து பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
ஏனென்றால் அதைவிட மிகப்பெரிய சவால் இந்தியாவுக்கு எதிராக காத்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் தொடர் என்பது முடிந்துவிட்டது. அதிலிருந்து நிச்சயம் எங்களுக்கு பெரிய அணிகளை வீழ்த்த முடியும் என்று நம்பிக்கை கிடைத்திருக்கிறது. இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது சாதாரண விஷயம் கிடையாது.
இந்தியா எப்போதுமே தங்களது சொந்த மண்ணில் விளையாடும் போது அசுரத்தனமான பலத்தை கொண்டிருக்கும். அதற்காக இந்தியாவை வீழ்த்துவது என்பது மிகப்பெரிய சவால் என்றும் சொல்ல மாட்டேன். இந்தியாவை வீழ்த்துவது சுலபம் என்றும் கூறமாட்டேன். அவர்கள் நாட்டில் அவர்களுக்கு ஏற்ற சூழலில் சிறப்பாக விளையாடக்கூடிய திறன் இந்தியாவிடம் இருக்கிறது.
நீங்கள் தரவரிசையை பார்த்தீர்கள் என்றால் கூட இந்தியா உச்சத்தில் இருக்கிறார்கள். குக்குபுரா பந்தை விட எஸ்.ஜி வகையான பந்து மிகவும் வித்தியாசமானது. எனவே எஸ் ஜி பந்தில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து நாங்கள் பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். குக்குபுறா வகையிலான பந்து புதிதாக இருக்கும் போது அதனை எதிர்கொள்வது கடினமாக ஆகிவிடும்.
ஆனால் பந்து பழையதாக மாறிவிட்டால் பேட்டிங் செய்வது மிகவும் ஈஸியாக இருக்கும். ஆனால் எஸ்ஜி வகையிலான பந்து புதிதாக இருக்கும் போது எதிர்கொள்வது ஈசியாக இருக்கும். ஆனால் பந்து பழையதாக மாறினால் பேட்டிங் செய்வது கடினமாக மாறிவிடும். இதை புரிந்து கொண்டு நாங்கள் எஸ்.ஜி பந்தை எப்படி எதிர்கொள்வது என்று பயிற்சி மேற்கொண்டு வருகிறோம்.
முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோர் குவிப்பது அவசியம். அதில் நாங்கள் கவனமாக இருக்கின்றோம். டெஸ்ட் கிரிக்கெட்டில் செஷன்களை வெல்ல வேண்டும். ஒவ்வொரு செஷனும், டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியம். முதல் செஷனில், நாங்கள் சரியாக விளையாடவில்லை என்றால் கூட அடுத்த செஷன்களில் முன்னேற்றம் பெற வாய்ப்பு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று லிட்டன் டாஸ் கூறியுள்ளார்.