சென்னை: இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 516 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் என்ற பெருமையுடன் அஸ்வின் விளையாடி வருகிறார். இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் சக இந்திய வீரர்களுடன் இணைந்து சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
ஹோம் சீசன் தொடங்கவுள்ள நிலையில், இந்திய ஸ்பின்னர்கள் விக்கெட் வேட்டையாட தயாராகி வருகின்றனர். 37 வயதாகும் அஸ்வினால் இன்னும் சில ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீடிக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது. இத்தனை ஆண்டுகளுக்கும் பின்னரும் டிஎன்பிஎல் தொடரில் களமிறங்கி அஸ்வின் தனது பேட்டிங்கில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்.

இதனால் அஸ்வின் 40 வயதாகும் வரை நிச்சயம் ஓய்வை அறிவிக்க மாட்டார் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அஸ்வின் அளித்துள்ள பேட்டியில் 40 வயது வரை கிரிக்கெட் விளையாடுவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில், இந்த நேரத்தில் எனது மனதில் எந்த எண்ணமும் இல்லை. ஏனென்றால் இன்றைய நாளினை மட்டுமே மனதில் வைத்து செயல்படுகிறேன். எதிர்காலத்தை கணக்கில் கொண்டதே கிடையாது.
வயதாகும் போது ஒவ்வொரு நாளும் நாம் கூடுதல் முயற்சிகளை செய்ய வேண்டிய தேவை உள்ளது. அதனால் அனைத்து நாட்களும் ஒரே போல் அமைவதில்லை. கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக நான் கூடுதல் முயற்சிகளையும், பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். ஆனால் இதுவரை ஓய்வு குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆனால் ஏதாவது ஒருநாளில், இது போதும் என்று தோன்றும். அப்போது உடனடியாக இந்த இடத்தில் இருந்து வெளியேறிவிடுவேன்.
டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை எனக்கென்று எந்த இலக்கையும் வைத்து கொள்ளும் வழக்கம் கிடையாது. அனில் கும்ப்ளே என்னிடம் நேரடியாகவே, அவரின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்று கூறினார். அவர் மிகச்சிறந்த மனிதர். நான் அவருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இதுவரை எந்த இலக்கையும் வைத்து கொண்டதில்லை. ஒவ்வொரு நாளினையும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். கிரிக்கெட்டையும் கொண்டாட்டமாக விளையாடுகிறேன்.
இது என் வாழ்வின் புதிய அத்தியாயம். 2018 முதல் 2020 வரை கிரிக்கெட்டில் எவ்வளவு கடினமான காலத்தை அனுபவித்தேன் என்று தெரியும். அங்கிருந்து என் வாழ்க்கை எப்படி மாறியது, இப்போது எப்படி வாழ்கிறேன் என்பதும் மிகவும் முக்கியம். அதனால் இந்த நிலை தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். கிரிக்கெட் மீதான காதலை ஒருநாளும் குறைக்க கூடாது. அதுதான் இப்போதைய இலக்காக இருக்கிறது. அதனால் எப்போது கிரிக்கெட் மீதான காதல் குறைகிறதோ, அப்போது ஓய்வை அறிவிப்பேன்.
நாம் அனைவரின் பணிகளும், இடங்களும் நிச்சயம் வேறு ஒருவரால் நிரப்பப்படும். அதுதான் இந்திய கிரிக்கெட். யாருடைய இடங்களையும் யாராலும் நிரப்ப முடியும் என்று தெரிவித்துள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள், நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் என்று அஸ்வின் அடுத்த 8 மாதத்தில் 10 போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.