முதல் டெஸ்ட் போட்டி
இந்தூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. அடுத்து முதல் நாளின் பாதியிலேயே இந்தியா தன் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடத் துவங்கியது.
இந்தியா அபாரம்
ரோஹித் சர்மா 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின் புஜாரா - துவக்க வீரர் மயங்க் அகர்வால் போட்டியை தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். முதல் நாள் முடிவு வரை விக்கெட் இழக்காமல் ஆடியது இந்த ஜோடி. மறுநாள் இரு வீரர்களும் அரைசதம் கடந்து ஆடினர்.
சிறிய சறுக்கல்
புஜாரா 54, கோலி 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அது மட்டுமே சிறிய சறுக்கலாக அமைந்தது. அடுத்து வந்த துணை கேப்டன் ரஹானே, மயங்க் அகர்வாலுடன் சிறப்பான கூட்டணி அமைத்தார்.
ரஹானே - மயங்க் ஆட்டம்
ரஹானே - மயங்க் இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 190 ரன்கள் சேர்த்தனர். இதனிடையே மயங்க் அகர்வால் 82 ரன்கள் அடித்து இருந்த போது அந்த சம்பவம் நடந்தது.
ஷாட் அடிக்க முயன்றார்
47வது ஓவரில் மெஹிதி ஹாசன் பந்து வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தில் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்றார் மயங்க் அகர்வால். ஆனால், பந்தை முழுவதுமாக தவறவிட்டார். பந்து அவரது காலில் பட்டது.
அவுட் கொடுத்த அம்பயர்
மெஹிதி ஹாசன் எல்பிடபுள்யூ அவுட் கேட்டார். பந்து லெக் திசையில் நகர்ந்து சென்றது. மேலும், சற்றே உயரமாக வந்ததால் ஸ்டம்ப்பில் பட வாய்ப்பு குறைவு தான். எனினும், எல்பிடபுள்யூ கேட்டவுடன் அம்பயர் ஏராஸ்மஸ் கையை தூக்கி அவுட் கொடுத்தார்.
அரண்டு போன மயங்க்
அதைப் பார்த்த மயங்க் அகர்வால் முகத்தில் பெரிய அதிர்ச்சி தெரிந்தது. சில நொடிகள் அதிர்ச்சியில் அப்படியே நின்றார். பின் ரஹானேவிடம் ஆலோசித்து விட்டு டிஆர்எஸ் ரிவ்யூ கேட்டார்.
ரிவ்யூ கேட்டார்
ரிவ்யூவில் பந்து காலில் பட்டாலும், ஸ்டம்ப்புகளை விட்டு விலகிச் செல்வது தெரிந்தது. அதை அடுத்து அம்பயர் எராஸ்மஸ் தன் தீர்ப்பை மாற்றி, நாட்-அவுட் கொடுத்தார். ரிவ்யூ இருந்ததால் தப்பினார் மயங்க் அகர்வால்.
இரட்டை சதம் விளாசல்
அதன் பின் சிறப்பாக ஆடிய மயங்க் அகர்வால் சதம் கடந்து இரட்டை சதம் அடித்தார். அதிலும் சிக்ஸ் அடித்து அவர் இரட்டை சதத்தை எட்டியது சிறப்பான தருணமாக இருந்தது.
டிக்ளர் செய்தது
மயங்க் அகர்வால் 243, ரஹானே 86, சாஹா 12, ஜடேஜா 60*, உமேஷ் யாதவ் 5* ரன்கள் எடுத்தனர். இந்தியா 6 விக்கெட்கள் இழப்பிற்கு 493 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. அடுத்து வங்கதேசம் 343 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடியது.