ஒரு நாளில் 20 ஓவர்கள் பவுலிங்.. வங்கதேச டி20 தொடரில் களமிறங்கும் மயங்க் யாதவ்? மோர்க்கல் திட்டம்!
மும்பை: வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய இளம் வேகப்பந்துவீச்சாளரான மயங்க் யாதவ் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. காயத்திற்கு பின் என்சிஏவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் மயங்க் யாதவ், ஒருநாளில் 20 ஓவர்கள் வரை வீசுவதற்கு ஏற்ப உடல்நிலையை தயார் செய்துள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக அறிமுகமான இளம் வேகப்பந்துவீச்சாளரான மயங்க் யாதவ் பலரின் கவனத்தையும் ஈர்த்தார். மணிக்கு 150 கிமீ வேகத்திற்கு மேல் எளிதாக வீசிய மயங்க் யாதவ், நட்சத்திர பேட்ஸ்மேன்களின் விக்கெட்டையே எளிதாக வீழ்த்தி காட்டினார். 4 போட்டிகளில் விளையாடிய மயங்க் யாதவ், 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இவரின் திறமையை பார்த்து அசந்து போன ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், ஆஸ்திரேலியா மண்ணில் மயங்க் யாதவை எதிர்கொள்ள ஆர்வமாக உள்ளேன் என்று தெரிவித்தார். இதனால் விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். அதன்பின் நேரடியாக என்சிஏவிற்கு அழைக்கப்பட்ட மயங்க் யாதவை, பிசிசிஐ நிர்வாகிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
என்சிஏவில் ஃபிட்னஸை எட்டியபின் மீண்டும் பவுலிங் பயிற்சியை மயங்க் யாதவ் தொடங்கினார். டி20 கிரிக்கெட்டுக்கு மட்டுமல்லாமல் நீண்ட ஸ்பெல்களை வீசக் கூடிய அளவிற்கான பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் மயங்க் யாதவ் குறித்து பிசிசிஐ நிர்வாகி பேசுகையில், மயங்க் யாதவ் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து, என்சிஏவில் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்.
வங்கதேசம் டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க தேர்வு குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதேபோல் அடுத்த சில மாதங்களுக்கு இந்திய அணி தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவுள்ளது. இதனால் மயங்க் யாதவை இந்திய அணியில் முயற்சிக்க தேர்வுக் குழுவினர் ஆர்வமாக உள்ளனர். தற்போது அவர் ரெட் பாலில் பயிற்சியை தொடங்கவில்லை.
ஒயிட் பாலில் மட்டும் ஒரே நாளில் 3 பகுதிகளாக பிரித்து 20 ஓவர்களை வரை பவுலிங் செய்து வருகிறார். விரைவில் புதிய என்சிஏ மைதானம் திறப்பு விழாவிற்காக அஜித் அகர்கர் பெங்களூர் வரவுள்ளார். அப்போது மயங்க் யாதவ் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக இந்திய அணி அடுத்த வேகப்பந்துவீச்சாளரை வளர்க்க முடிவு செய்துள்ளது.
22 வயதாகும் மயங்க் யாதவின் பவுலிங்கில் இன்னும் துல்லியம் வரவில்லை என்றாலும், அவரின் லைன் மற்றும் லெந்த் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. உம்ரான் மாலிக்கை போல் கட்டுப்பாடு இல்லாமல் பவுலிங் செய்யாமல், மயங்க் யாதவ் சிறந்த கட்டுப்பாட்டை தனது பவுலிங்கில் வைத்துள்ளார். அதேபோல் லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் இந்திய அணி பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்துள்ளார். இதனால் அவர் மயங்க் யாதவ்-க்கு ஆதரவு கொடுக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications