டெல்லி: இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான மயங்க் யாதவை வர்ணனை செய்த போது கிண்டல் செய்த வங்கதேச முன்னாள் வீரர் தமீம் இக்பாலுக்கு, வர்ணனையில் இருந்த முரளி கார்த்திக் அதே இடத்திலேயே பதிலடி கொடுத்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ரிங்கு சிங்கின் அதிரடியான அரைசதத்தால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது.

இதன்பின் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய 34 பந்துகளில் 74 ரன்களும், பவுலிங்கில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய நிதிஷ் குமார் ரெட்டிக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. இந்திய அணிக்காக விளையாடிய 2வது டி20 போட்டியிலேயே அவர் ஆட்டநாயகன் விருது வென்றது பாராட்டுகளை பெற்றுள்ளது.
அதேபோல் பவுலிங்கில் இளம் நட்சத்திர வீரரான மயங்க் யாதவின் செயல்பாடுகளும் பலரையும் ஈர்த்துள்ளது. ஏனென்றால் 2 போட்டிகளில் விளையாடியுள்ள மயங்க் யாதவ் 8 ஓவர்களை வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஐபிஎல் தொடர்களில் சாதாரணமாக 156 கிமீ வேகத்தில் வீசிய மயங்க் யாதவ், வங்கதேச டி20 தொடரில் முழு திறனையும் வெளிப்படுத்தவில்லை.
அதிகபட்சமாக 149.7 கிமீ வேகத்தில் தான் பவுலிங் செய்திருக்கிறார். என்சிஏவில் இருந்து நேரடியாக மயங்க் யாதவ் இந்திய அணிக்கு விளையாடுவதால், முதல் டி20 தொடரிலேயே ரிஸ்க் எடுக்க கூடாது என்ற எச்சரிக்கையுடன் இருக்கிறார். அதேபோல் பவுலிங் ஆக்ஷனில் சிறிய மாற்றங்களையும் செய்துள்ளார். தலை அதிகமாக சாய்வதை தற்போது குறைத்துள்ளார்.
இதனால் மயங்க் யாதவ் இதுவரை ஒரு பந்தை கூட 150 கிமீ வேகத்தில் வீசவில்லை. இந்த நிலையில் 2வது டி20 போட்டியின் போது வர்ணனையில் இருந்த வங்கதே முன்னாள் வீரர் தமீம் இக்பால், இந்த 2 டி20 போட்டிகளிலும் சேர்த்து கூட மயங்க் யாதவ் எந்த பந்தையும் 150 கிமீ வேகத்தில் வீசவில்லை என்று கிண்டல் செய்தார்.
அப்போது அருகில் இருந்த முன்னாள் வீரர் முரளி கார்த்திக், வங்கதேச அணியும் ஒரு முறை கூட 150 ரன்களை எடுக்கவில்லை என்று தரமான பதிலடியை கொடுத்தார். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் மயங்க் யாதவ் வேகத்தை மட்டும் நம்பாமல் இம்முறை ஸ்விங், பவுன்சர் மற்றும் ஸ்லோயர் பந்துகளையும் பயன்படுத்தி வருகிறார்.
ஐபிஎல் தொடரின் போது மயங்க் யாதவ் பெரிதாக ஸ்லோயர் பந்துகளை வீசவில்லை. இதனால் என்சிஏவில் மயங்க் யாதவிற்கு ஏராளமான ஆலோசனைகளும், அதற்கேற்ப பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அடுத்தடுத்து வரும் டி20 தொடர்களில் மயங்க் யாதவ் செயல்பாடுகள் அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.