வெறும் 4 ஐபிஎல் மேட்ச் ஆடிய வீரருக்கு அவசர அவசரமாக இந்திய அணியில் இடம்.. விதிகளை மீறிய பிசிசிஐ
குவாலியர்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக மயங்க் யாதவ் களமிறங்குவார் என கூறப்படுகிறது. அப்படி நடந்தால் இதுவே அவரது சர்வதேச அறிமுகமாக இருக்கும். இந்த நிலையில், பிசிசிஐ அவரை அவசர, அவசரமாக சர்வதேச போட்டிகளில் அறிமுகம் செய்வது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
மயங்க் யாதவ் கடந்த 2024 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பெற்று தனது முதல் ஐபிஎல் தொடரில் விளையாடினார். 22 வயதே ஆன அவர் அந்த ஐபிஎல் தொடரில் நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஏழு விக்கெட்களை வீழ்த்தினார். ஆனால், இதைவிட அவரது பந்து வீசும் வேகம்தான் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

அசாதாரணமாக 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினார் மயங்க் யாதவ். அதிகபட்சமாக 157 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி வியக்க வைத்தார். அது மட்டும் இன்றி தொடர்ந்து 145 முதல் 155 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினார். பொதுவாக அதிக வேகத்தில் பந்து வீசக் கூடியவர்கள் சில சமயம் மட்டுமே அதை செய்வார்கள். ஆனால், மயங்க் யாதவ் ஒவ்வொரு ஓவரிலும் இடைவிடாமல் அந்த வேகத்தில் பந்து வீசியது வியப்பை ஏற்படுத்தியது.
அவரை உடனடியாக இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசி வந்தனர். ஆனால், மயங்க் யாதவ் 2024 ஐபிஎல் தொடரில் மொத்தம் நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஏனெனில், அவருக்கு மூன்று போட்டிகளுக்குப் பின் காயம் ஏற்பட்டது. அதற்குக் காரணம் அவர் அதிவேகத்தில் பந்து வீசுவது தான் என கிரிக்கெட் விமர்சகர்கள் சுட்டிக் காட்டினார்கள்.
காயத்திலிருந்து மீண்ட பின், 2024 ஐபிஎல் தொடரில் அவர் ஒரு போட்டியில் மட்டுமே பந்து வீசினார். அதன் பின் மீண்டும் அவருக்கு காயம் ஏற்பட்டது. மொத்தத்தில் நான்கு ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இதை அடுத்து அவர் பிசிசிஐ-யின் கட்டுப்பாட்டுக்குள் வந்தார். தேசிய கிரிக்கெட் அகாடமி அவருக்கான சிகிச்சைகளை முன்னின்று கவனித்து, அவரை மீண்டும் போட்டிகளில் ஆடும் அளவிற்கு தயார் செய்தது.
அவர் உள்ளூர் போட்டிகளில் ஆடிய பின்னரே இந்திய அணியில் அறிமுகம் ஆவார் என முதலில் சொல்லப்பட்டது. அதற்கு காரணம், அவர் இதுவரை ஒரே ஒரு முதல் தர டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார் என்பது தான். இந்திய அணியில் இடம் பெறும் வீரர்கள் நிச்சயமாக ஐபிஎல் செயல்பாட்டை மட்டும் வைத்து தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என பல சந்தர்ப்பங்களில் பிசிசிஐ-யை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் தேர்வுக் குழுவினர் கூறி இருக்கின்றனர்.
ஆனால், தற்போது தாங்கள் உருவாக்கிய விதிக்கு முரண்பாடாக உள்ளூர் போட்டி அனுபவம் இல்லாத மயங்க் யாதவை அணியில் தேர்வு செய்து இருக்கிறது பிசிசிஐ. ஐபிஎல் தொடரில் அதிக வேகத்தில் பந்து வீசினார் என்ற ஒரே காரணத்தால் இந்திய அணியில் தேர்வு செய்துள்ளனர். இத்தனைக்கும் அவர் வெறும் நான்கு ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். அந்த வகையில் பார்த்தால் அவருக்கு ஐபிஎல் அனுபவமும் இல்லை.
எந்த அடிப்படையில் பிசிசிஐ அவரை சர்வதேச போட்டிகளில் அறிமுகம் செய்கிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், அவர் தனக்கு காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் அளவுக்கு அனுபவம் பெற்று இருக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது இந்திய அணியில் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான், முகேஷ் குமார் என பல வேகப் பந்துவீச்சாளர்கள் சுழற்சி முறையில் இடம் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், மயங்க் யாதவை சர்வதேச போட்டிகளில் அவசரமாக அறிமுகப்படுத்த வேண்டிய தேவை என்ன? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வங்கதேச அணிக்கு எதிராக மயங்க் யாதவ் சிறப்பாக செயல்படவில்லை என்றால் இந்த விமர்சனங்களுக்கு பிசிசிஐ பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்.


Click it and Unblock the Notifications