குவாலியர்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி சார்பாக இளம் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். அவர் வீசிய முதல் ஓவரில் ஒரு ரன் கூட கொடுக்காமல் மெய்டனாக வீசி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. குவாலியரில் நடந்து வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் இந்திய அணியின் இரு இளம் வீரர்களான மயங்க் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகிய இருவரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.

கடைசியாக 2016ஆம் ஆண்டு இந்திய டி20 அணிக்காக ஒரே நேரத்தில் இரு வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். 2016ஆம் ஆண்டு அடிலெய்ட் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வேகப்பந்துவீச்சாளர் பும்ரா மற்றும் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இருவரும் அறிமுகம் செய்யப்பட்டனர். அதேபோல் ஒரு வேகப்பந்துவீச்சாளர் மற்றும் ஒரு ஆல்ரவுண்டர் இந்தப் போட்டியில் அறிமுகமாகி உள்ளனர்.
இந்தப் போட்டிக்கு முன்பாக முன்னாள் வீரர் முரளி கார்த்திக் இந்திய அணியின் கேப்பை மயங்க் யாதவிற்கு அணிவித்து வரவேற்றார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் முதல் ஸ்பெல்லை வீசினார். அதில் அர்ஷ்தீப் சிங் வீசிய 2 ஓவர்களிலும் தலா 1 ஒரு விக்கெட்டை வீழ்த்த, பின்னர் வருண் சக்கரவர்த்தி மற்றும் மயங்க் யாதவ் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டனர்.
அதில் வருண் சக்கரவர்த்தி வீசிய 5வது ஓவரில் 16 ரன்கள் விளாசப்பட்ட நிலையில், பவர் பிளேவின் கடைசி ஓவரை வீச மயங்க் யாதவ் அழைக்கப்பட்டார். டி20 கிரிக்கெட்டில் இந்த ஓவரை வீசுவது எளிதான விஷயமல்ல. ஏனென்றால் கடைசி பவர் பிளே ஓவர் என்பதால், பேட்ஸ்மேன்கள் கூடுதல் ரிஸ்க் எடுத்து ரன்களை குவிக்க விரும்புவார்கள்.
ஆனால் மயங்க் யாதவ் வீசிய 6வது ஓவரில் ஒரு ரன் கூட சேர்க்கப்படவில்லை. ஸ்லோயர் பால்கள் மற்றும் வேகமான பால்களை டெஸ்ட் போட்டிக்கான லைன் மற்றும் லெந்தில் வீசி மயங்க் யாதவ் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் பவுலிங் செய்த முதல் ஓவரையே மெய்டனாக வீசியது பயிற்சியாளர் கம்பீர் மற்றும் அபிஷேக் நாயர் இருவருக்குமே ஆச்சரியம் கொடுத்தது.
தொடர்ந்து 8வது ஓவரை வீச மீண்டும் மயங்க் யாதவ் வந்தார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட, 2வது பந்தை எதிர்கொள்ள அனுபவ வீரரான மஹ்மதுல்லா வந்தார். 146.1 கிமீ வேகத்தில் வீசப்பட்ட பந்தை மஹ்மதுல்லா டீப் பாய்ண்ட் திசையில் தூக்கி அடித்தார். அந்த பந்து நேராக வாஷிங்டன் சுந்தர் கைகளில் சென்று விழுந்தது. இதன் மூலமாக 2வது ஓவரிலேயே முதல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
2 ஓவர்கள் வீசிய மயங்க் யாதவ் வெறும் 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு மெய்டன் உட்பட ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்த ஓவரிலேயே மயங்க் யாதவ் 150 கிமீ வேகத்திற்கும் அதிகமாக வீசி அதிர்ச்சியையும் கொடுத்தார். இதனால் மயங்க் யாதவ் இந்திய அணியின் நிரந்தர வீரர்களில் ஒருவராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.