மும்பை : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
இந்தியா வரும் ஐந்து மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகள் விளையாட இருக்கிறது. நீண்ட நெடிய டெஸ்ட் சீசனில் முதல் தொடராக வங்கதேசம் இருக்கிறது. இதனால் இந்த தொடரில் பல முன்னணி வீரர்களும் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழலில் இந்திய அணியின் முக்கிய பவுலரான முகமது சமி கடந்த உலகக்கோப்பை தொடருக்கு பிறகு காயம் காரணமாக எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. ஐபிஎல் தொடரில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமி அந்தத் தொடர்களும் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் முகமது சமி தன்னுடைய காயத்திலிருந்து குணமடைந்து தற்போது தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதனால் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முகமது சமி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமியை உடனடியாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் படி வேகப்படுத்தக்கூடாது என நிபுணர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
குறிப்பாக இந்திய அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் சமியின் பங்கு மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. இந்த தொடருக்கு முன்னால் அக்டோபர் மாதம் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் மூன்று டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
இந்த இரண்டு தொடர்களும் மிகவும் முக்கியமானது என்பதால் சமி அதில் பங்கு பெற வேண்டும். இதனால் சமியை அவசரப்படுத்தி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட வைத்து அவருக்கு காயம் மீண்டும் ஏற்பட்டால் அவரால் அடுத்த ஆறு மாதத்திற்கு எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.
இதனால் சமி விஷயத்தில் கவனமாக செயல்பட மருத்துவக்குழு அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதன் காரணமாக சமியை மெதுவாக பயிற்சி செய்ய வைத்து அவர் 100 சதவீதம் உடல் தகுதி ஏட்ட நேரம் கொடுத்து அதன் பிறகு நியூசிலாந்து தொடரில் சமியை பயன்படுத்தலாம் என்று பிசிசிஐ முடிவு எடுத்திருக்கிறது.