குவாலியர்: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் மயங்க் யாதவ் அறிமுகம் செய்யப்பட்டார். வெறும் நான்கு ஐபிஎல் போட்டிகள் மட்டுமே ஆடிய அவரை அவசரமாக அறிமுகம் செய்தது ஏன்? என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. அவர் வெறும் 33 உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். அதிலும் ஒரே ஒரு முதல் தர டெஸ்ட் போட்டியில் மட்டும் தான் விளையாடி இருக்கிறார்.
அனுபவமே இல்லாத அவரை இந்திய அணியில் ஆட வைத்தது ஏன்? என்பது குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதன் பின்னணியில் இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் இருக்கிறார். 2024 ஐபிஎல் தொடரில் தான் மயங்க் யாதவின் அதிவேக பந்து வீச்சு வெளி உலகிற்கு தெரிய வந்தது.

அப்போதே அவரை விரைவில் இந்திய அணியில் ஆட வைக்க வேண்டும் என்ற பேச்சுக்கள் எழுந்தன. அதே சமயம் அவர் அதிக அனுபவம் இல்லாத பந்து வீச்சாளராக இருந்தார் என்பதாலும், 2024 ஐபிஎல் தொடரிலேயே அவருக்கு இரண்டு முறை தசைப் பிடிப்பு ஏற்பட்டது என்பதாலும் பிசிசிஐ அவரை கவனமாக கையாள முடிவு செய்தது.
பிசிசிஐ மயங்க் யாதவை காயத்திலிருந்து மீட்டு கொண்டு வர தனி கவனம் செலுத்தியது. அடுத்து அவரை உள்ளூர் போட்டிகளில் ஆட வைத்து, அதன் பின் இந்திய அணியில் விளையாட வைக்க பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழு முடிவு செய்து இருந்தனர். அவர் நேரடியாக இந்திய அணியில் இடம் பெற்றாலும் அடிக்கடி காயம் ஏற்படும் என்ற சந்தேகம் காரணமாக முதலில் உள்ளூர் போட்டிகளில் ஆட வைக்க முடிவு செய்து இருந்தனர்.
இதன் இடையே இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் மயங்க் யாதவை வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரிலேயே அறிமுகம் செய்ய வலியுறுத்தினார். இதற்கு முக்கிய காரணம் அவர் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் மயங்க் யாதவுக்கு பயிற்சி அளித்து இருந்ததுதான்.
மயங்க் யாதவ் அதிக வேகத்தில் பந்து வீச மோர்னே மோர்கல் அளித்த பயிற்சியும் முக்கிய காரணம். 2024 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்கல் இருந்தார். அதே அணியில்தான் மயங்க் யாதவும் இடம் பெற்று இருந்தார். ஐபிஎல் தொடருக்கு முன் நடந்த பயிற்சி முகாமில் மோர்னே மோர்கல், மயங்க் யாதவிற்கு பயிற்சி அளித்தார்.
மயங்க் யாதவின் திறமையை கணித்த மோர்கல், அவரை ஐபிஎல் போட்டிகளிலும் உடனடியாக விளையாட வைக்க காரணமாக இருந்தார். மயங்க் யாதவுக்கு தற்போது 22 வயது ஆகிறது. இப்போதே அவரை ஆட வைத்தால் தான் அவரது திறமையை இந்திய அணி முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என மோர்கல் பிசிசிஐ-க்கு சுட்டிக்காட்டி இருக்கிறார். அவரது யோசனையை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழுவினர் ஒப்புக் கொண்டனர்.
அதன் காரணமாகவே மயங்க் யாதவ் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டார். தனக்கு வாய்ப்பளித்ததை நியாயப்படுத்தும் வகையில் தான் வீசிய முதல் ஓவரையே அவர் மெய்டனாக வீசி இருந்தார். மேலும் இந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். இதை அடுத்து மயங்க் யாதவ் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது. அவர் இனி படிப்படியாக இந்திய ஒரு நாள் அணி மற்றும் டெஸ்ட் அணியிலும் இடம் பெறுவார் எனக் கூறப்படுகிறது.