குவாலியர்: இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு சரியாக இல்லை என புதிய பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் அதிருப்தியை தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணி அடுத்து வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
இந்த தொடருக்கான அணியில் ஹர்திக் பாண்டியா இடம் பெற்று இருக்கிறார். முன்னதாக அவர் டி20 அணியின் துணை கேப்டன் பதவியை இழந்திருந்தார். அதற்கு அவரது உடற் தகுதி முக்கிய காரணமாக சுட்டிக் காட்டப்பட்டது. இந்திய அணியின் அடுத்த டி20 கேப்டன் என சொல்லப்பட்டு வந்த நிலையில், அவருக்கு துணை கேப்டன் பதவி கூட கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறி இருந்தது.

தற்போது அவரது பந்துவீச்சிலும் அதிருப்தி தெரிவித்து இருக்கிறார் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல். இதன் மூலம் மட்டும் ஹர்திக் பாண்டியாவின் முக்கியத்துவம் இந்திய அணியில் குறைந்து வருவதாக தெரிகிறது. வலைப் பயிற்சியின் போது மோர்னே மோர்கல் - ஹர்திக் பாண்டியா இடையே சில நிமிடங்களுக்கு தீவிரமான பேச்சுவார்த்தை இருந்ததாக கூறப்படுகிறது. என்ன நடந்தது?
வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடருக்கு முன் இந்திய வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். அந்த வலைப் பயிற்சியில் பவுலிங் பயிற்சியாளரும், உலகின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராகவும் இருந்த மோர்னே மோர்கல் ஹர்திக் பாண்டியாவை உன்னிப்பாக கவனித்து வந்தார். அவர் ஓடி வந்து பந்து வீசும் போது எதிர்முனை ஸ்டம்புக்கு மிக அருகே செல்வதை கவனித்தார்.
பின்னர் ஹர்திக் பாண்டியாவிடம் அது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்ததுடன், அவரது ஓட்டத்தை மாற்றுமாறும் கேட்டுக் கொண்டார். அது குறித்து அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசினர். பின்னர் ஹர்திக் பாண்டியா தனது பந்துவீச்சு முறையை மாற்றும் முயற்சியில் இறங்கினார். தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்திய டி20 அணியில் மயங்க் யாதவ், ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் வேகப் பந்துவீச்சாளர்களாக உள்ளனர்.
இவர்கள் மூவரை தவிர்த்து சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா அணியின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களாக உள்ளனர். இவர்களுடன் நிதிஷ் குமார் ரெட்டியும் அணியில் இருக்கிறார். அவரும் வேகப்பந்து வீசும் திறன் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஹர்திக் பாண்டியாவுக்கு இந்திய அணியில் போட்டி அதிகரித்து வருகிறது.