குவாலியர்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் மயங்க் யாதவ், நிதிஷ்குமார் ரெட்டி என இரண்டு வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் இந்திய அணியின் தொப்பியை முன்னாள் வீரர்கள் முரளி கார்த்திக் மற்றும் பார்த்திவ் பட்டேல் வழங்கினர். பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் அவர்களை அழைத்து அறிமுகம் ஆகும் வீரர்களுக்கு தொப்பியை வழங்குமாறு கூறினார்.
இந்த நிலையில், முரளி கார்த்திக் தனக்கு அளிக்கப்பட்ட இந்த கவுரவம் குறித்து நெகிழ்ந்து போயிருக்கிறார். வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரில் நடைபெற்றது. அந்த போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் மயங்க யாதவ் மற்றும் ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி அறிமுகம் செய்யப்பட்டனர்.

இதுவே அவர்களது சர்வதேச அறிமுகம் ஆகும். அவர்களுக்கு போட்டிக்கு முன்பு இந்திய அணியின் தொப்பியை வழங்கி கவுரவம் செய்யும் சிறிய நிகழ்வு நடைபெற்றது. பொதுவாக முன்னாள் வீரர்கள் இந்த கவுரவத்தை பெறுவார்கள். அவர்கள் அறிமுகமாகும் வீரர்களுக்கு தொப்பியை அளித்து, அவர்களை ஊக்குவிக்கும் வார்த்தைகளை கூறுவார்கள்.
மைதானத்தில் அந்த நேரத்தில் முன்னாள் வீரர்கள் யாரும் இல்லை என்றால் இந்திய அணியின் பயிற்சியாளரோ அல்லது கேப்டனோ தொப்பியை வழங்கி இளம் வீரர்களை வாழ்த்துவார்கள்.. இந்த நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது மைதானத்தில் பிட்ச் குறித்து பேசிக் கொண்டு இருந்த முன்னாள் இந்திய வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் முரளி கார்த்திக் மற்றும் பார்த்திவ் பட்டேலை அழைத்த பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவர்களுக்கு தொப்பியை வழங்கும் கவுரவத்தை அளித்தார்.
இது குறித்து பின்னர் முரளி கார்த்திக் தனது நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவிற்கு இந்த அறிமுகம் இது மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். எனக்கும் இது மறக்க முடியாத நாளாக மாறி உள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் மற்றும் கபில் தேவ் ஆகியோரிடம் இருந்து நான் தொப்பியை பெற்றேன். என்னை தொப்பியை வழங்குமாறு கவுதம் கம்பீர் கூறியது இதயத்தை தொட்ட தருணமாக இருந்தது. அது அற்புதமான ஒரு செயல்." எனக் கூறி இருக்கிறார்.
மயங்க் யாதவ் முதல் டி20 போட்டியில் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் ஒரு மெய்டன் உட்பட 21 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். அதிலும் தான் வீசிய முதல் சர்வதேச கிரிக்கெட் ஓவரை மெய்டனாக வீசி சாதனை படைத்தார்.