மும்பை: துலீப் டிராபிக்கான 4 அணிகளில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்படாததற்கான காரணம் குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். தற்போதைய சூழலில் ரெட் பால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவில்லை என்று கூறியுள்ள நடராஜன், இன்னும் 2 ஆண்டுகள் தொடர் பயிற்சிகள் செய்வதோடு, ஃபிட்னஸ் பிரச்சனை இல்லாமல் இருந்தால் மட்டுமே ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் அறிமுகமான நடராஜன், இந்திய அணிக்காக மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். காபா டெஸ்ட் போட்டியில் நடராஜன் சிறப்பாக பவுலிங் செய்ததோடு, இந்திய ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்தார் என்று சொல்லலாம். ஒரே சுற்றுப்பயணத்தில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என்று 3 வடிவங்களிலும் அறிமுகமாகினார்.

அதன்பின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் நடராஜன் விளையாடினாலும், டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் திரும்பவில்லை. ரஞ்சி டிராபி தொடரில் கூட நடராஜன் களமிறங்காமல் தவிர்த்து வந்தார். இதன் காரணமாகவே துலீப் டிராபி தொடரிலும் நடராஜன் எந்த இந்திய அணியிலும் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து அஸ்வின் பேசுகையில், நடராஜன் ரெட் பால் கிரிக்கெட்டை விளையாடி 3 ஆண்டுகளாகிவிட்டது.
அதனால் துலீப் டிராபியில் சேர்க்க வேண்டும் என்ற பேச்சு பொருளற்றது என்று கூறியிருந்தார். ஐபிஎல், டிஎன்பிஎல், விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி தொடர்களில் மட்டுமே நடராஜன் விளையாடி வருகிறார். இதுகுறித்து தமிழ்நாடு வீரர் நடராஜன் பேசுகையில், ரெட் பால் கிரிக்கெட்டில் விளையாடி கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாகிவிட்டது. ரெட் பால் கிரிக்கெட்டை தவிக்கிறேன் என்பது கிடையாது.
ஆனால் ரெட் பால் கிரிக்கெட்டை விளையாடுவதால், பணிச்சுமை கூடுதலாக இருப்பதாக உணர்கிறேன். அதனால் இந்த சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர்த்து வருகிறேன். பணிச்சுமை அதிகமாக இருக்கும் போது, கால்களில் பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் சில நேரம் விளையாடுவதையே நிறுத்திவிடுகிறேன். எனக்கு ரெட் பால் கிரிக்கெட் மனதிற்கு நெருக்கமானது.
ஒவ்வொரு முறை களமிறங்கும் போதும் உற்சாகமாக இருக்கும். இன்னும் சில ஆண்டுகளுக்கு பின் நிச்சயம் ரஞ்சி கிரிக்கெட் பக்கம் வருவேன். தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டால், என்னால் ரெட் பால் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட முடியும். தற்போதைய கவனம் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக 14 போட்டிகளில் விளையாடிய தமிழ்நாடு வீரர் நடராஜன், 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இருந்தாலும் ஜிம்பாப்வே டி20, இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர்களில் கூட நடராஜன் தேர்வு செய்யப்படவில்லை. 33 வயதாகும் நடராஜன் ஒயிட் பால் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இந்திய அணியின் தேர்வில் பாரபட்சம் காட்டப்படுவதாக பார்க்கப்படுகிறது.