டெல்லி : வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து ஒன்பதாவது போட்டியில் இந்தியா வென்று அசத்தியிருக்கிறது.
டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் தொடக்கவீரர் அபிஷேக் சர்மா 15 ரன்களிலும்,சஞ்சு சாம்சன் 10 ரன்களிலும் ஆட்டம் இழக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூரியகுமார் எட்டு ரன்களில் வெளியேறினார்.

இதனை அடுத்து இந்திய அணி 41 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, இளம் வீரர் நிதிஷ்குமார் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். 34 பந்துகளில் 74 ரன்கள் குவித்த அவர் ஏழு சிக்ஸர்களும், நான்கு பவுண்டரிகளும் விளாசினார். இதேபோன்று ரிங்கு சிங் ஜோடி சேர்ந்து 29 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார்.
இதில் ஐந்து பவுண்டரிகளும், மூன்று சிக்சர்களும் அடங்கும். ஹர்திக் பாண்டியா 19 பந்துகளின் 32 ரன்கள் விளாசினார். இதனால் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களம் இறங்கியது. தொடக்கம் முதலே இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து திரும்பினர்.
பர்வேஷ் ஹூசைன் 16 ரன்களிலும் லிட்டன் தாஸ் 14 ரன்களிலும் கேப்டன் நஜ்முல் உசேன் 11 ரன்களிலும் ஆட்டம் இழக்க, வங்கதேச அணியின் அனுபவ வீரரான மகமுதுல்லா மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 39 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று சிக்ஸர்கள் அடங்கும். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இதன் காரணமாக வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.
பேட்டிங்கில் அசத்திய நித்திஷ் குமார் பந்துவீச்சிலும் நான்கு ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்து வீசி 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் இந்திய அணி சர்வதேச டி20யில் தொடர்ந்து ஒன்பது போட்டிகளில் வென்று அசத்தி இருக்கிறது.